பக்கம்:அதிசயப் பெண்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கத்திரிக்காய் ஜூரம் 49


மட்டியப்பன் பிறருக்கு மனமார ஒரு பொருளைத் தர மாட்டான். அந்தக் கத்திரிக்காயைப் பறித்து, வெளியூர்ச் சந்தைக்குப் போய் விற்றுக் காசு சம்பாதித்தான். தன்னுடைய வீட்டுக்குக்கூட அதை உபயோகிக்கவில்லை.

அந்த ஊர் வைத்தியர் எல்லாருக்கும் வேண்டியவர். அவர் பேசும் வார்த்தைகளிலேயே பாதி வியாதி தீர்ந்துவிடும். வைத்தியத்திலும் அவர் திறமை பெற்றவர். நல்ல அநுபவமும் புத்திக் கூர்மையும் உடையவர். அவருடைய மகள் கர்ப்பமாக இருந்தமையால் பிரசவத்திற்காகப் பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். அவள் வாய்க்கு வேண்டிய உணவுகளையும் தின்பண்டங் களையும் வைத்தியர் மனைவி செய்து கொடுத்தாள். ஒரு நாள் அவள் கத்திரிக்காய் வேண்டுமென்று ஆசைப் பட்டாள். அவளுடைய தாய் வைத்தியரிடம் தெரிவித்தாள்

“நம் ஊர் மட்டியப்பன் வீட்டில் கத்திரிச்செடி பயிர் பண்ணியிருக்கிருர்களாம். நன்ருகக் காய்க்கிறதாம். கொஞ்சம் கேட்டு வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்று அவள் சொன்னாள்.

வைத்தியர் மட்டியப்பனிடம் போய்க் கேட்டார். மற்ற யாராக இருந்தாலும் வைத்தியர் கேட்பதைக் கொடுக்க மறுக்கவே மாட்டார்கள். மட்டியப்பனுக்கோ கத்திரிக்காய் கொடுக்க இஷ்டமில்லை. வைத்தியரிடம் விலை கேட்பதும் நன்றாக இராது.

அவன், “நேற்றுத்தான் ஒரு பிஞ்சு விடாமல் பறித்துக்கொண்டு போய்ச் சந்தையில் விற்றுவிட்டு வந்தேன்” என்று ஒரு பொய்யை எடுத்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/51&oldid=1104965" இலிருந்து மீள்விக்கப்பட்டது