9
பாவைதான் முன்னாள் வாயாடி என்பதைப் புரிந்து கொள்ள அவனுக்குக் கொஞ்சம் சிரமமாக யிருந்தது. அவள் வேறு யாரோ என்று கூட நினைத்து விட்டான். ரொம்ப நேரமாக அத்தை மகள் எதிர்ப்படவே யில்லை, சத்தத்தையும் கேட்க முடியவில்லை என்றதும் அவளைப் பற்றி அத்தையிடம் கேட்கலாமா வேண்டாமா என்று ஆலோசனை செய்து பின் கேட்டே தீர்த்தான்.
'என்ன அத்தை, ரத்னத்தை எங்கே காணோம்? சௌக்கியமா இருக்கிறாள் அல்லவா? மூச்சுப் பேச்சு காணோமே !'
அத்தை சிரித்தாள். 'நீ வாசலில் வந்து இறங்கியவுடனேயே அடுப்பங்கரைக்குப் பறந்தோடிப் போயிட்டாளே அவ ! திண்ணையிலேயே நின்னுக்கிட்டிருந்தா, திடுதிடுன்னு அங்கே ஓடி வரவும் என்னட்டி ஏன் இன்னு கேட்டேன். அத்தான்.... அத்தான் வந்தாச்சு என்றாள். உடனேதான் நான் இங்கு வந்தேன்' என்றாள்.
மின்னல் போல் தோன்றியவளா ரத்னம்! அடாடா! அவன் கவிதை யுள்ளம் முனகியது---
- 'இத்னி போலே கிடந்த புள்ளெ
- எத்தாப் பெருசா வளர்ந்துட்டு......ஏ
- எத்தாப் பெருசா வளர்ந்திட்டு (னு) !'
இப்பொழுது அவளைப் 'புள்ளெ' என்று சொல்ல அவனுக்குத் துணிச்சல் இல்லை! அவன் பழைய ரத்னத்தைப் பற்றி---தானும் அவளும் ஆடித் தீர்த்த சண்டைகளைப் பற்றி----ஒரு கணம் நினைத்தான்.
அவன் பேசாமலிருப்பதைக் கண்ட அத்தை கேட்டாள் : 'ஆமா, நீ அவளைப் பார்க்கலியா பார்த்தும் அடையாளம் தெரியலையோ? ரொம்ப வருஷமாச்சு, ஏழெட்டு வருஷமிருக்காது ?"