7
'நீயும் தான் பதிலுக்குப் பதிலு பேசினியே இப்ப ஏன் அழுதே?' என்று சமாதானப்படுத்தினாள் அன்னை..
சுந்தரம் சொன்னான் : 'அழாதேம்மா கண்ணு. அழாதே அழாதே-அழுகுணிப் பழம் வாங்கித்தாரேன்'
அவள் சகல சமய சர்வ வீச்சும் பாணமான 'வவ் வவ்வே-...வவ்வவ்' என்பதைத் தான் பிரயோகிக்க முடிந்தது.
'இத்தனை நேரம் கத்தினாளே. இப்ப ஏன் அழ ஆரம்பிச்சா? என்ன சண்டை?' என்று கேட்டபடி வந்தாள் பக்கத்து வீட்டுச் சித்தி.
- சண்டை என்ன சண்டை! அத்தை மக அம்மான் மகன் இப்படி இசலிக்கி சலிக்கிட்டுத்தான் கிடக்கும். சிறுவயசு தானே' என்று பூரித்துப் போனாள் தாய்.
'ஆமாமா,’----இது சித்தி.
அவள் தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னாள்: 'என்ன இருந்தாலும் இவளுக்கு வாய் அதிகம் அம்மா. வாயி வாயி எட்டு வீடு இடம் கொள்ளாது, அவ்வளவு கிழியுது.'
அழுவதுபோல் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்த பெண் ஆங்காரமாகத் தலை நிமிர்த்திக் கத்தினாள் : 'ஆமா, உங்க வீட்டிலே வந்து இடம் கேட்டமாதிரித் தான். இவொ வந்துட்டோ பெரிய மனுஷி. ...'
சித்தி சிரித்தாள். அம்மை சிரித்தாள். அவன் சிரிக்க அவளும் சிரித்தாள். அவள் போக்கு எல்லோருக்கும் சிரிப்பையே தந்தது.
'ஹேஹே! அழுத புள்ளெயும் சிரிச்சுதாம்; கழுதைப்பாலையும் குடிச்சுதாம். ஹே ஹே' என்று தான் கற்றிருந்த பாடத்தைக் கக்கினான். 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத் தவறாத பையன்.