இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இடம் : அந்தமான் தீவில் கைதிகள் வேலை பார்க்கும் இடம்
பாத்திரங்கள்: நடராஜன், மற்றொரு கைதி.
[கிழக் கைதி ஒருவன் விறகு உடைத்துக் கொண்டே பாடுகிறான். இசை இன்பத்தில் மயங்கிய மற்றொரு வாலிபக் கைதி கிழவனை நெருங்குகிறான்.]
[இராகம்-கரகரப்பிரியா]
(தாளம்-ஆதி)
சிந்தையைக் கவர்ந்திடும் இந்திய நாட்டை இந்த
சென்மத்தில் காண்பேனோ?-எந்தன்
அந்திய காலம் வரை அந்த மான் தீவிலேயே
நொந்துயிர் வீழ்வேனோ? (சிந்தை)
கங்கை காவிரி யமுனை கோதாவரியோ டின்னும்
கணக்கில்லா நதியோடி-எங்கும்
பொங்கும் செழுமையும் களிப்பும் தரும் சென்ம
பூமியைக் காண்பேனோ? (சிந்தை)
வாலிபக் கைதி : ஆஹா என்ன இனிமை! என்னபொருள் நயம்! எங்கே இன்னுமொருமுறை பாடுங்கள் கேட்போம்!