பக்கம்:அந்தமான் கைதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

கேட்டு அழுததெல்லாம் போதாதென்று இன்னும் உனக்கு வேறு அழவேண்டுமா? எரிகிற வீட்டில் கிடைத்தது ஆதாயமென்றா பார்க்கிறாய்? இனிமேல் ஒரு பைசாகூடக் கொடுக்கமாட்டேன். மரியாதையாய்ப் போய்விடு. தெரியுமா?

முனி : இங்கே பாருங்க, என்னாது? காரியம் முடிஞ்சு போச்சின்னா இப்படிப் பேசுறீங்க? இதெல்லாம் நல்லால்லேங்க!

பொன் : டேய் யாரடா அங்கே? (ஜம்புவும் மற்றொரு வேலையாளும் வருகிறார்கள்; அவர்களிடம்) இந்த அயோக்கியப் பயலைப் பிடித்து வெளியில் தள்ளுங்கள்.

(என்று சொல்லிவிட்டு திவான்பகதூர் உள்ளே போய் விடுகிறார்.)

ஜம்பு: ஏய் முனியாண்டி! என்ன கலாட்டா இது?

முனி : ஏய்யா! நீங்க இருக்கும் போதுதானே சொன்னாரு. காரியம் முடிஞ்சதும் ரூவா ஐநூறு தாரேன்னு. இப்பக் கேட்டா, போடா வாடாப் பொட்டக் கண்ணான்னு ஓட்டுனா அதுக்கு நானா மசிவேன்!

ஜம்பு : காரியம் முடிய நீ என்ன சாதித்து விட்டாய்? இவர் இல்லாவிட்டால் காரியம் முடிந்திருக்குமோ?

முனி : யாரு இல்லேன்னா அது வேறே நமக்குள்ளே ஒத்துப்போற விஷயமுல்லே அது. இப்ப அவரு பணங் குடுத்தா நான் தான் என்ன, மறந்துடுவேனா? அது வழக்கப்படி உள்ள கமிஷன் உங்களுக்குக் குடுத்திடுவேன். இப்படி அடியோட ஒண்னுமில்லேன்னா? அது நாயமாங்குறேன்?

(ஜம்பு முனியாண்டி காதில் ரகசியமாக ஏதோ சொல்கிறான்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/108&oldid=1073462" இலிருந்து மீள்விக்கப்பட்டது