30
பாலு : ஏன்? வீட்டைவிட்டு வெளியில் வரவே மாட்டாயோ?
லீலா : ஆமாம். உங்களுக்கு எப்பொழுதும் இந்த விளையாட்டுப் பேச்சுத்தான். என் மனவேதனை உங்களுக்கென்ன தெரிகிறது?
பாலு : லீலா! ஒரு விஷயமல்லவா, அதைச் சொல்ல மறந்து விட்டேனே.
லீலா : என்ன?
பாலு : இன்று மாலை காந்தி மைதானத்தில் பிரமாதக் கூட்டம். உன் அண்ணாவின் பிரசங்கம் ரொம்பப் பிரமாதம். அதனால்தான் நான் வரக்கூடத் தாமதம்.
லீலா : அப்படியா? இன்னிக்குக் கூட்டத்தில் அண்ணாவும் பேசினரா? அவர் பேசுவதாக என்னிடம் சொல்ல வில்லையே? ஐயோ பாவம், காலையில் போனவர் இன்று பகல் உணவுக்குக்கூட வரவில்லை.
பாலு : சாப்பாட்டுக்குக்கூட வரவில்லையா, ஏன்?
லீலா : ஆமாம், புண்ணில் கோலிடுவதுபோல, சதா ஒரு மனிதனை இடித்து இடித்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்?
பாலு : நீ சொல்வதொன்றும் எனக்கு விளங்கவில்லையே?
லீலா : வறுமையும் வயதும் அதிகம் ஆக ஆக, என் அம்மா வின் புத்தியும் பொறுமையும் குறைந்து கொண்டே வருகிறது போலிருக்கிறது. அவரைக் காணும் போதெல்லாம் “வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுகிறாய்; கொஞ்சங்கூடக் கவலையில்லை; அந்தக் கடன் கட்டவில்லை, இந்தக் கடன் கொடுக்கவில்லை” என்று சிடுசிடென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.