பக்கம்:அந்தமான் கைதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

நான் வீட்டில் இருப்பது வேறு அவர்களுக்குப் பெரிய பாரமாய் இருக்கிறதாம். அம்மா பேச ஆரம்பித்தால் உடலே குன்றிவிடுகிறது. பாவம் அவர் என்ன செய்வார்? வேலைக்காக அலையாத இடமே இல்லை.

பாலு : அடடா! பாவம் உலகமே இப்படித்தான். நல்லவர்களுக்கும் திறமைசாலிகளுக்கும், இவ்வுலகத்தில் மதிப்பே யில்லை. அவர்கள் உழைத்தாலும் தகுந்த ஊதியம் கிடைப்பதும் இல்லை. அடாடாடா! இன்றையக் கூட்டத்தில் அவர் பேசியிருக்கிறார் பாரு அதைப்பற்றி என்ன அபிப்பிராயம் சொல்வதென்றே எனக்கு விளங்கவில்லை......

லீலா : (ஆவலோடு) தாங்கள் முழுமையும் கேட்டீர்களா? அடாடா! நான் கேட்க முடியாமல் போய்விட்டதே! எதைப் பற்றிப் பேசினார்? என்னென்ன பேசினார்?

பாலு : பால்ய விவாகத்தின் தீமைகளைப் பற்றியும் காதல் மணம் மறுமணம் இவற்றின் அவசியத்தைப் பற்றியும் அழகாகப் பேசினார். இன்னும் மொழிப் பற்று, நாட்டுப் பற்று, அடிமை வாழ்வின் கேவல நிலை, சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம், பெண்கள் முன்னேற்றம், விபசாரத்தின் இழிவுத் தன்மை, தற்காலக் கல்வி முறையின் சீர்கேடு, கைத் தொழில், கிராம முன்னேற்றம் அடாடாடா! இனி மேல் சொல்லவேண்டியது என்பதாக ஒன்றும் பாக்கியில்லை. அப்பப்பா! என்ன கம்பீரமான பேச்சு, உயர்ந்த உவமானங்கள்; ஆணித்தரமான எடுத்துக் காட்டுகள்! ஒவ்வொரு வார்த்தைக்கும் சபையில் கர கோஷமும் ஆரவாரமும்தான். உன் அண்ணாவும் இவ்வளவு உயர்வாகப் பேசுவாரென்று நான் எதிர் பார்த்ததே இல்லை. எனக்கே ஆச்சரியமாகப் போய் விட்டது, போயேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/32&oldid=1026261" இலிருந்து மீள்விக்கப்பட்டது