“என் உடம்பிலே உயிர் தங்கியிருக்கிறதுக்கும் நீதான் காரணம், ரஞ்சனி!- அது சரி, நம்மகிட்டே என்னமோ முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போறதாக நம்ப பாபு சொன்னானே? அந்த ரகசியம் என்ன ஏதுன்னே புரியமாட்டேங்குதே?”
“ஆமாங்க, அத்தான்; ஒருவேளை அது சிதம்பர ரகசியமோ, என்னமோ?”
“இருக்கும், இருக்கும்!”
“ஆமா, சிதம்பர ரகசியம்னா அது என்னங்க, அத்தான்?”
“அதுவும் சிதம்பர ரகசியம்தான்!”
“சொல்லுங்க, அத்தான்!”
“தெரிஞ்சால்தானே சொல்வேன்?”
“நல்ல அத்தான்!”
“இன்னெரு தரமும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்: நான் நல்ல அத்தான் என்கிற உண்மையான நடப்பை நான் மனிதாபிமானத்தோட உன் சந்நிதானத்திலே ஊர்ஜிதம் செஞ்சு வருஷம் பத்து தாண்டிப்போயிடுச்சு, ரஞ்!”
ரஞ்சனிக்குப் பேச நா எழவில்லை. “உண்மைதானுங்க, அத்தான்!-அந்த மகத்தான சத்தியத்தை-கண்ணியமான உன்மையை-உன்னதமான தருமத்தை, நீங்க கொடுத்த இந்த உயிர், இந்தப் பத்து வருஷத்திலே, ஒவ்வொரு நிமிஷத்திலேயும் கை தொழுதுகிட்டே இருக்குது என்கிற உண்மையான நடப்பும் உங்களுக்குத் தெரிஞ்சதுதானுங்களே. அத்தான்?” பேச நா எழுந்து, எப்படியோ, ஒருவாறாகப் பேசி முடித்தாள், அவள்.
144