பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

இளவரசி வாழ்க


3

ண்புசால் பழந்தமிழ் இலக்கியங்களிலே ஓர் உண்மை செப்பப்பட்டிருப்பது மாறாத நடப்பாகவும் மாற்றமுடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளன. அந்த உண்மை இதுவேயாகும்: ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்’ என்றும் பூமகளே இறையவனுக்கு நிகரானவன் என்றும் மன்னன் உயர்த்தப் பட்டிருக்கிறான். மன்னன் வழிப்படியே குடிமக்கள்!

சிருங்காரபுரி நாடு ஆனந்தக் களிப்பைச் சிந்தாக்கிப் பாடித்திளைத்திருக்க வேண்டிய இந்த இனிய நறபொழுதிலே, தெய்வம் எப்படிப்பட்ட தலைச்சுழியை எழுதி வைத்துவிட்டான். நாட்டின் அரசவைப் பாவாணர் தமிழேந்தி குறித்த பிரகாரம், அயன் கையெழுத்தை யார்தாம் அறிய வல்லமை பெற்றிருக்கிறார்கள்?

மன்னர் பூபேந்திரபூபதி, யார் என்ன தேற்றியும் மனம் தேறினார் இல்லை. ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் அவரும் அவரது அரசவையினரும் அவருடைய குடிமக்களும் முகத்தில் ஈயாடாமல், சோம்பிய தோற்றத்துடன் காணப்பட்டார்கள்!

“என் ராணியை இனி என்று காண்பேன்?...அவள் தெய்வம் போல வந்தாள். தெய்வமாக ஆகிவிட்டாள்.”அடிக்கொரு முறை அரசர் பெருமான் சித்தம் பேதலித்தவர் போன்று புலம்பினார். தம் மனைவி தன் நினைவுச்சின்னமாக விட்டுச் சென்றுள்ள ஆண்மகவின் அழுகையும் தவிப்பும் வேறு அவரைப் பாடாய்ப்படுத்தின.

யார் யாரோ தாதிகள் அரண்மனைக் குழவியைப் பராமரிக்க அமர்த்தப்பட்டார்கள். அவர்களிலே யாருடைய அன்புக்கும் அது கட்டுப்படவில்லை. விடிய விடிய விழித்திருந்தும், அதன் ஒலத்தை அடக்க முடியவில்லை, பணிப்பெண்களால்.