பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

இளவரசி வாழ்க


ஏற்கெனவே தெரியும் என்ற அளவில் இருந்தது அவள் பார்வையின் அழுத்தம்.

“நான் அனாதை. இப்போது அன்னையிழந்திருக்கும் இளையராஜாவை இமை, கண்ணைக் காப்பதுபோல நான் வளர்த்துக் காப்பாற்றுவேன்! நான் என் கன்னித்தன்மையின் மீது ஆணைவைத்துச் சொல்கிற உறுதிமொழி இது!...” என்றாள் தன்மையான தொனியில், நாதசுரபிக்கு இரைத்தது.

“அப்படியா?” என்று ஆர்வம் காட்டிய இளவரசி அவளை உள்ளே அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றாள். தங்கத் தொட்டிலில் சயனித்திருந்த இளவரசு நாதசுரபியின் ஸ்பரிசம்பட்டு விழித்து, அவளைக் கண்டு ஆனந்தக் கடலாடியது. “ஆஹா, எல்லாம் தெய்வசித்தம்” என்று குதூகலம் எய்தினாள் கன்யாகுமரி.

“ஏதோ விட்டகுறை–தொட்டகுறை என்பது போலத் தான் இருக்கிறது. இச்சம்பவம். நம்மையெல்லாம் பார்த்துப் பயந்து வீறிட்ட இச்சிசு – பச்சைமண் இந்தப் புதியவளைக் கண்டதுமே இப்படி அழகாகச் சிரிப்புக் காட்டுகிறதே!..... இவள் ஒருக்கால், சூன்யம் பயின்ற கன்னியோ?” என்று கூட தங்களுக்குள் ஒருவர் காதை மற்றவர் கடித்துக் கொள்ளலாயினர்.

தன் தந்தை தன் மீது கொண்டிருக்கும் சீற்றத்தினையும் மறந்து, பாசத்தின் மேலீட்டினால், அரசரின் ஓய்வுமனையை நாடிச் சென்று, “அப்பா, அப்பா! இளவரசுக்கு நம் குலதெய்வம் நல்ல செவிலித்தாயைக் கொண்டு வந்து காட்டியிருக்கிறது!” என்று செப்பினாள். நவரத்தினமாலை மின்னியது.

மன்னரின் கண்கள் “அப்படியா!” என்று களிப்புக் கண்ணீர் சிந்தின!...