பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

107


5

சிருங்காபுரி நாட்டின் மன்னரவையும் ஆட்சிபீடமும் மிகவும் கறுசுறுப்புடன் இயங்கின. நாட்டின் ஆளுகைக்கு உயிர்ப்பான சக்திகள் எண்பேராயம், பன்னிரு அமைச்சர் குழு, சீரெழுபடையணி, நீதிமிகு நிதிக்காப்பு, உயிரொத்த நகர்ப் பாதுகாவல் போன்ற பல பிரிவுகளால் இயங்கின; இயக்கப்பட்டன.

“வேழநாட்டான் நம் எதிரி!...வடபுலம் நம் பகைவர்! இக் கருத்தை என் குடிமக்கள் யாரும் மறக்கக்கூடாது! எதிரி எப்போதும் விழிப்புடன்தான் இருப்பான்!...நமக்கு அவன் ஒரு பொருட்டல்ல! ஆனால், நாம் என்றென்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டிய காலம் அணுகிக் கொண்டிருக்கிறது. ஜாக்கிரதையுடன் இருங்கள்!” என்பன போன்ற தூண்டுதல் பிரசங்கங்கள், துண்டோலைகளின் வாயிலாக மன்னரின் வாய்மொழிகளாய் நாட்டில் எங்கெங்கும் பரவின.

மன்னர் பெருமான் இப்போது எந்நேரம் பார்த்தாலும் அந்தப்புரத்தில்தான் காட்சி தந்தார். புதிதாக வந்த நாதசுரபியோடு மிகவும் இறுக்கமாக ஒட்டிக் கொண்டது மன்னரின் குழந்தை. நல்ல செவிலித்தாயாக தன் மகனுக்குக் கிடைத்திருக்கும் நற்பேறு தெய்வப்பிரசாதமேயாகும் என்று அகமகிழ்ந்தார் அரசர்!

அத்துடன் முடிந்ததா கதை? ஊஹூம் அதிலிருந்துதான் கதையே ஆரம்பமானது.

விலகி விலகியிருந்த வேந்தர் நாளாவட்டத்தில் ஒட்டி ஒட்டி வந்துவிட்டார் – பணிப்பெண் நாதகரபியின் பக்கமாக!

இந்த விசித்திரமான மாற்றத்தை முதலில் அனுமானம் செய்து கண்டறிந்தவள், இளவரசி கன்யாகுமரிதான்!