பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

இளவரசி வாழ்க



இளவரசி கன்யாகுமரியோ, விதியாகச் சிரித்தவாறு நிற்கிறாளே?

ஓர் அரைக்கணம், பேய்க் கணமாக ஊர்ந்தது.

மறு இமைப்பிலே–

உருவிய வாளுடன் கம்பீரமாகக் காட்சியளித்தாள் இளவரசி.

“போரிடத் தொடங்குவோமா, வேழநாட்டின் விஜயேந்திர மன்னரே?” என்று வினவி, மீண்டும் விதியாகச் சிரித்தாள்.

“ஒ!” என்றான் விஜயேந்திரன்.

மறுகணம்–

இரு தரப்பிலிருந்தும் வீறுகொண்டு புறப்பட்ட வாட்கள் இரண்டும் மின்னல் பிழம்புகளாகிச் சமமான வல்லமையுடன் ஒன்றையொன்று முட்டி மோதின!

மாமன்னர் பூபேந்திர பூபதி மேனி சிலிர்த்தார். விழிகளில் கண்ணிர் தளும்பத் தொடங்கியது. “ஆண்டவனே மன்னன் விஜயேந்திரனும் இளவரசி கன்யாகுமரியும் ஒருவருக்கு மற்றவர் துளியும் விட்டுக் கொடுக்க மனமின்றி, தங்கள் தங்கள் நாட்டின் மீது கொண்ட பாசத்தை முன் நிறுத்திச் சரிசமானமான ஆக்ரோஷத்துடனே போரிடத் தொடங்கி விட்டார்களே?... வாட்போர் நடத்தத் தொடங்கிவிட்ட விஜயேந்திரன்–கன்யாகுமரி இருவரில் வெற்றி பெறுவது யாராவது ஒருவராகத்தானே இருக்கமுடியும்? அப்படியென்றால், மற்றவர் தோல்வியைத் தழுவ நேரும் அல்லவா?– வேண்டாம் இந்த வாட்போர்ச் சோதனை!. ஆதிபகவனே! அலகிலா விளையாட்டுடைய ஆண்டவனே!–என்னுடைய பாசக்கனவை மெய்ப்படுத்திப் பலிக்கச் செய், அப்பனே!? நெஞ்சம் நெக்குருகி அஞ்சலி செய்தார். மறு இமைப்பில், மெய் சிலிர்க்க விழிகளைத் திறந்தார்: “போர் வேண்டாம் போரை நிறுத்துங்கள்!” என்று ஆணையிடலானர்!