34
அந்த நாய்க்குட்டி எங்கே?
“அண்ணா!”
“கோதை, இது என்னுடைய பரிசு. உன் பிறந்த நாளுக்கு இந்த ஏழையின் அன்புப்பரிசு!” என்றான் பூபாலன்.
பூங்கோதை மகிழ்ச்சியுடன் அதை வாங்கி அணிந்து கொண்டாள்.
“நானும் உனக்கு ஒரு பரிசு தரவேண்டாமா? இதோ!” என்று சொல்லித் தன் கழுத்திலிருந்த அந்தப் புதிய வைரச் சங்கிலியை கழற்றி அவன் கழுத்தில் போட்டாள் பூங்கோதை.
பிறகு இருவரும் சிரித்து மகிழ்ந்து, கை கோர்த்து நடனமாடினார்கள்.
“கட்!... ஒகே!... டேக்!...”
டைரக்டரின் குரல்கள் மாறி மாறி ஒலித்தது.
படம் பிடிக்கப்பட்டது:
அடுத்த இரண்டாவது வினாடி–
“ஆ!” என்று கதறினான் பூபாலன். கீழே கிடந்த கத்தியொன்றை எடுத்து எதிரே வீசினான்.
“ஆ!” என்ற எதிர்க்குரல் கேட்டது. எதிரே அந்தக் குரலுக்குரிய உருவம் நின்றது.
“ஐயோ! சர்க்கஸ்காரன்... சுகுமாரன்!”
சில வினாடிகள் தேய்ந்தன.
“தம்பி பூபாலன்! உன்னைக் கைது செய்திருக்கிறோம், இதோ நீ கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கும் இந்த வைரச் சங்கிலி திருட்டுச் சொத்து. இதோ பார் ‘சர்க்கஸ் சுகுமார்!’ என்ற எழுத்துகள் இந்தச் சங்கிலியின் டாலரில் மின்னுகின்றன...!