பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

41



“அடடே, மிஸ்டர் பூபாலனா..? உன் பெயர் ஞாபகம் வந்ததும், உடனே எனக்கு நம் ஊர் எழுத்தாளர் ஒருவரின் புனைப்பெயரும் ஞாபகத்துக்கு வந்துவிடும். சாப்பிடப்பா! அடைக்கலம். இரண்டு டீ போடு ம்...! அப்படியே உட்காரப்பா? பட்டணத்து வாடை அமர்க்களமாய் வீசுதே? ஆமா, நீ மறுபடியும் பட்டணத்துக்கு டேரா தூக்கப் போறியா. உங்க அப்பாரு இங்கேதான் வெள்ளாமை விளைச்சலைப் பார்த்துக்கிட்டு இருக்கப் போறதாகச் சேதி கிடைச்சுதே...? மெய்யா? அந்த சர்க்கஸ்காரனை ‘அரஸ்ட்’ பண்ணிட்டாங்களாமே?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே போனார் பாலகிருஷ்ணன்.

தன் எதிர்காலத் திட்டம் பற்றிய கேள்விகள் எழுந்தபோது பூபாலன் நறுக்குத் தறித்த மாதிரி கூறின பதில் இதுதான் “ஆமா எனக்குப் பட்டணம் அறவே பிடிக்கவில்லை. நல்லவங்களுக்கு வரக்காத்திருக்கிற ஆபத்துக்களுக்குக் கணக்குமில்லே, வழக்குமில்லே. இதுதான் என் பிறந்த ஊர் இங்கேதான் நான் படிக்கப் போறேன். அப்பாவோடு நானும் வெள்ளாமை செய்யக் கூடப் பழகிக்கிடுவேன். எங்களைப் போன்ற ஏழை பாழைங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிற பெரிய மனிதர்கள் தாம் என் வரை தெய்வங்கள்:”

தப்பித்தோம் பிழைத்தோம் என்று நடந்துவந்தான் பூபாலன். வழியில் அவனுடைய நண்பர்கள் மனோரஞ்சிதம், தங்கவேலு, வீரமணி, சிங்காரம் ராஜாக்கண்ணு, துரைராசன், தியாகு முதலியோர் குறுக்கிட்டார்கள்.

“பலே, முன்பு நம் ஊர்க்கார எழுத்தாளர் பெயர் திரையிலே வந்தது; இப்போது நம் பூபாலனைப் படத்திலே சந்திக்கப் போகிறோம். பூவைமாநகர் இப்போதுதான் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது”

“ஆமா, ஆமா! அதுபோலவே இந்த ஊர்க்காரங்க எல்லாரும் ஒருவருக்குள்ளே ஒருவர் வம்படிச்சிக்கிடாம, கட்சி மனப்-