பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அந்த நாய்க்குட்டி எங்கே?


நாய்க்குட்டி...! இது முதல் அதிசயம்! அடுத்த அதிசயம் என்னான்னா, அல்லி அவனோட வளர்ப்புப் பெண்ணாம்! நீ அங்கே வேலைக்கு இருக்கிறப்பவே அது எல்லா ரகசியத்தையும் உங்கிட்டே சொல்லத்தான் துடிச்சுதாம்; சமயம் வாய்க்கலையாம். இப்போது மூன்றாம் அதிசயம் நடக்கப் போகுது. ரெடி, ரெடி, பார், பார்” என்று சொல்லி விட்டுப் பூபாலனுக்கு முன்னே வந்து நின்றாள் பூங்கோதை.

அவர்கள் முன்னிலையில் இப்பொழுது ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டே‘ஜாம் ஜாம்’ என்று வந்து நின்றது.

காண்பது கனவா, நனவா என்றே சிறுவனுக்குப் புரியவில்லை. எதிரில் நின்ற அந்த நாயைக் குனிந்து தொட்டு பார்த்தான். அவனை நெருங்கி அவன் முகத்தை நாக்கால் நக்கியது அது. அன்பு, அன்பு, அன்பு! மறுகணம் அவன் அந்த நாயைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினான். இரண்டு கண்களும் இரண்டு லட்சம் கண்ணிர் முத்துக்களைச் சரம் தொடுத்து அவனுடைய நாய்க்கு மாலை போட்டன.

“தெய்வமே, நீ நிஜமாகவே உலகத்திலே எங்கேயோ ஓர். இடத்திலே இருக்கத்தான் இருக்கிறாய்! இல்லையானால் என் அருமை நாய் என்கிட்டே திரும்பவும் கிடைச்சிருக்குமா?” என்று சொல்லிய வண்ணம் குதித்தான் பூபாலன்.

“பூபாலன், நாய்தான் ரொம்பவும் நன்றியுள்ள பிராணி, அது செத்து விட்டதாகப் பேப்பரிலே போட்டிருந்த சேதிகூட அந்தச் சர்க்கஸ்காரன் செஞ்ச சூழ்ச்சிதானாம்! இந்த நாய்க்குட்டியின் நன்றிக் கடனுக்கு ஈடும் இல்லை; இணையும் இல்லை. அன்றைக்கு சாவிலிருந்து இதைக் காப்பாற்றினாய்! அந்த நன்றியை இன்னமும் மறக்கலே, பாரு...! சரி. இதோ பார், நாலாவது அதிசயம்!” என்று கூறிக்கொண்டே ஒரு பத்திரிக்கையை எடுத்து நீட்டினார் டைரக்டர் பரசுராம்.