மாஸ்டர் உமைபாலன்
47
உமைபாலன் அந்தப் புதிய இடத்துக்கு வந்து சேர்ந்ததும், மறந்துவிடாமல் பெருமூச்சை வெளியேற்றிவிட்டான். அதே சூட்டோடு, உள்ளத்திலே பரவிக்கிடந்த சூட்டையும் தணித்துக்கொள்ள எண்ணினான். ஆகவே, தன் பிஞ்சு நெஞ்சில் எழுதி, மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த மூதுரையை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொண்டான். பிறகுதான், அவனுக்குத் தன்னுடைய உடற்சூடும் நினைவுக்கு வந்தது. உடனே, அரைக்கைச் சட்டையின் பொத்தான்களைக் கழற்றினான்; பூந்தென்றலை உள்ளே புகச் செய்தான். ஒரு சில வினாடிகள் வரை கண்களை மூடிக்கொண்டு அப்படியே நின்றான்!
இப்பொழுதுதான் அவனுக்குத் தன் நினைவு மீண்டது. விழிகளைத் திறந்தான், ஈரத்துளிகள் இரண்டு சிந்தின. அவற்றைக் கண்டதும், அவன் ஒரு முறை தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.
இடுக்கண் வரும்போது சிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவன் சிரித்தானோ?....
இரண்டு நாள் பட்ட கஷ்டங்களை அவனால் மறப்பது சாத்தியமா?