பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

49



காலாற சிறுபொழுது நின்றான்; பின்னர் புறப்பட்டான்; சுற்றுமுற்றும் பார்த்தான்; மணிக்கூண்டு பளிச்சிட்டது. அந்தி வெயிலில் எவ்வளவு அழகுகொண்டு விளங்கியது அந்த மணிக் கூண்டு!

பஸ் நிலையத்தின் பரபரப்பைக் கடந்து ராமநாதன் செட்டியால் ஹால் வாசலில் நின்று, முச்சந்தியில் வழி வகைகளை வெகு சிறப்புடன் காண்பித்துக் கொண்டிருந்த போலீஸ்காரரின் திறனை வியந்தபடி திரும்பினான். விண்முட்டிய கோபுரக் கலசம் தெரிந்தது. ‘ஆஹா! பாடப் புத்தகத்திலே படிச்சது கனகச்சிதமாக இருக்குதே!... கலசத்தின் நிழல் படியாத அதிசயத்தையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் நந்தியையும் நேரில் பார்த்து ரசித்து, அதே ரசனையுடன் ராஜ ராஜசோழனின் கலாபிமானப் புகழையும் போற்ற வேணும்!... என்று இளம் மனத்தில் நினைவுகள் விளையாடலாயின. சோழர் மண் அவனை மெய்மறக்கச் செய்தது போலும்!

காந்திஜி வீதியில் வந்து மிதித்து, குறுக்கிட்ட வளைவுப் பகுதியையும் கடந்து, பூங்காவின் கீழ் முனையில் ஒதுங்கி நின்றான் உமைபாலன். லேசாகத் துளிர்த்திருந்த வேர்வையைத் தன்னுடைய சட்டையின் நுனியினால் துடைத்தான். கிழிசல் ‘சடக்’ கென்று முத்தமிட்டது; கிழிசலின் அளவு சற்றே விரிந்துவிட்டது.

அவனது பிஞ்சு மனமும் விரியத்தான் செய்தது. மிஞ்சிக் கிடந்த அந்த ஒரு பைசாக் காசையும் ‘பிச்சை’ இட்ட மனம் விரியாமல் என்ன செய்யும்!...

“ரொம்பப் புண்ணியம், அண்ணா” என்றாள் ஏழைச்சிறுமி.

“நீ என்ன தங்கச்சி, என்னமோ புண்ணியத்தைக் கண்டதாட்டம் பேசுறே?... எனக்குப் புண்ணியம் வேண்டாம்; உன்னோட பசியைப் போக்குறதுக்குத் துளியளவு உதவிசெய்ய முடிஞ்ச வரைக்கும் நான் சந்தோஷப்படுகிறேன். இன்னமும் நிரம்பச்