பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மாஸ்டர் உமைபாலன்


கடிகாரம் ஓடியது.

ஜெயராஜ் புறப்பட்டுவிட்டான்! நேர்த்தியான ‘சில்க் ஷர்ட்’ மேனியில் மின்னியது. அவன் துள்ளிக் குதித்து உள்ளே ஆளோடியை அடைந்தான். “பாலா...!” என்று குரல் கொடுத்தான்.

அங்கே ஒரு மூலையில் உமைபாலன் குந்தி பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்த ஜெயராஜ், “நான்தான் உனக்குக் காசு தர்றதாச் சொன்னேனே, பின்னே நீ எதுக்கு இன்னிக்கும் இதைச் சாப்பிடனும்?” என்று பரிவுடன் வினவினான்.

கடைசிக் கவளத்தை வழித்துப்போட்டுக் கொண்டான் உமைபாலன். சுண்டல் குழம்பைத் தொட்டுச் சுவைத்தபடி இலையைச் சுருட்டி வீசிக் கை கழுவித் திரும்பியதும் அவன் சொன்னான்: “கடன் வாங்கி இட்டிலி சாப்பிடுறதைக் காட்டிலும் இதுதான் எனக்கு நிம்மதி ராஜ்! எங்க மாதிரி எழை பாழைங்களுக்கு வயிறும் ஆசையும் சுருங்கித்தான் இருக்கவேனுமாக்கும்! உனக்கென்ன, ராஜா! நிஜமாகவே நீ ராஜாதான் என்கிற விஷயத்தை இப்பத்தான் அறியமுடிஞ்சுது!...உன்னோட பட்டுச் சொக்காயே சொல்லுதே நீ பெரிய இடத்துப் பிள்ளை என்கிறதை!...”

ஜெயராஜ் முகம் திடுதிடுப்பென்று கறுத்தது. “சரி, புறப்படு” என்று தூண்டினான்.

இருவரும் கை கோத்துக் கொாண்டு கிளம்பி விட்டார்கள்!

பிரகதீஸ்வரர் ஆலயம், சரபோஜி மன்னர் அரண்மனை, கலைக்கூடம் போன்றவற்றைப் பார்த்துக் களித்துவிட்டார்கள் அவர்கள். ஆகவே, அடுத்ததாக எங்கே போவது என்று மட்டுப்படவில்லை. முதலில் ஜெயராஜ் வயிற்றுப்பாட்டைக் கவனித்தான். உமைபாலன் வெளியே நின்றான். அப்போது, முன்பொரு சமயம் பார்த்த பிச்சைக்காரத் தங்கச்சி பூவழகியைக் கண்டான். விடுமுறைச் செலவுக்கென்று கிடைத்த நாலணாச் சில்லறையில் ஒரு பத்துக்காசை எடுத்து அவளிடம் நீட்டிவிட்டு, ஆர்ச்சுக்கு நெருங்கி ஒரு பக்கம் ஒதுங்கினான். நிஜார்ப்பையில் கையை நுழைத்துப் பழைய பத்திரிகைத்தாளைப் பிரித்தான். ‘காணவில்லை’ என்ற