பூவை எஸ். ஆறுமுகம்
65
“உஸ்...‘டா’ போடாதே....இதுதான் உனக்கு மாப்பு!.. உன்னைப் போல எனக்கும் சுயகவுரவம் உண்டு. உஷார்!” என்று கம்பீரமாக மொழிந்தான் உமைபாலன். சென்னையைப் பார்க்கவேண்டுமென்ற தன் ஆசையை வெளியிடவே, உடனேயே நிறைவேற்றுவதாக வாக்களித்தான் ஜெயராஜ்.
இருவரும் ஒட்டலை அடைந்தபோது மணி இரண்டு அடிக்கச் சில வினாடிகள் இருந்தன.
சாப்பாட்டு இலைகள் அவர்களை அழைத்தன.
ஜெயராஜ் உட்கார்ந்து வாயில் அள்ளிக் கொட்டத் தொடங்கினான்.
கை கழுவி வந்த உமைபாலன் இலையில் குந்தினான். சோற்றைப் பிசைந்தான்.
அப்போது, ரேடியோ பயங்கரமான விதி போல அலறியது.
குந்திய உமைபாலன் குபிரென்று எழுந்து விட்டான். ‘தெய்வமாகி வந்த நேருஜியே!... இவ்வளவு சீக்கிரமாக நீங்கள் தெய்வமாகி விட்டீர்களே!...
அவனது பிஞ்சு மனம் வெந்து உருகியது.
அந்த ஓட்டலிலே மிகவும் பரபரப்பான பொழுதல்லவா அது!
கல்லாவில் ‘கனபாடி’ கங்காதரம்-அதாவது, கோபுவின் தகப்பனார் வீற்றிருந்தார். உச்சியில் சுற்றிய காற்று அவருக்குப் போதுமா...போதாது. ஆகவே, கையிலும் ஒரு விசிறி மட்டையை வைத்திருந்தார். பில்களைப் பார்த்துப் பணம் வாங்கிப் போட்ட நேரம் போக, ஒழிந்த வேளையில் அவரது கை அவ்விசிறியை நாடும் முதுகு அரித்தாலும் விசிறி அவருக்குக் கை கொடுப்பது உண்டு.