பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

மாஸ்டர் உமைபாலன்



இருவரும் ஒருவரையொருவர் பொருளுடன் பார்த்தனர். பேச்சுக்குப் பேச்சு ‘டா’ போட்டுப் பேசினாரே, அதற்காகவா?

காரியம் என்றால் உமைபாலனுக்கு எப்போதுமே கண். அவன் உள்ளே போய்த் திரும்பி வந்து ‘சரியாக எல்லாம் போடப்பட்டிருப்பதாகச்’ சொன்னான்.

“நானும் பார்க்கிறேன், அந்தப் பயல் ஜெயராஜ் என்னவோ பெரிய குபேரர் வீட்டுப்பிள்ளையாண்டான் மாதிரிதான். கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமத் திரியறான்!” என்றார் பெரியவர்.

உமைபாலன் முன்வந்து, தன் நண்பன் ஜெயராஜின் உண்மைக் கதையைச் சொல்லிவிட வேண்டுமென்று துடித்தான்.

ஆனால், அதற்குள்ளாக கார் ஒன்று வாசலில் வந்து நிற்பதைக் கண்டதும், ஏனோ உமைபாலன் சலனம் அடைந்தவனாக வாய் மூடி மெளனியானான்.

ஐயரோ அவரையும் அறியாமல் மேஜையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு, ‘ம்’...போங்களேண்டா பசங்களா!... யாரோ பெரியவா வர்றா!... போய் டேபிளைச் சுத்தம் பண்ணுங்களேண்டா!... என்றார். பதட்டம் குரலில் பேசியது.

சிறார்கள் இருவரும் உள்ளே விசையுடன் விரைந்தனர்.

வெளியே கார் நின்றதும், அதிலிருந்து பட்டுச் சொக்காய் போட்ட ஆசாமி ஒருவர் இறங்கி வந்து, கல்லாவை அணுகினார். தம் பையன் ஒருவன் காணாமல் போய்விட்டதாயும் பேப்பரிலே விளம்பரம் செய்தும் பயனில்லை என்றும், பையன் பெயர் கருணாகரன் என்றும், தமக்குக் காரைக்கால் சொந்த ஊர் என்றும், பெரிய ஜவுளி வியாபாரி எனவும் விவரித்தார் அவர்.