பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

71



தலைக்கு மேலே தொங்கிய ‘இங்குள்ள பலகாரங்கள் அசல் நெய்யில் செய்தவையல்ல!’ என்ற எச்சரிக்கைப் பலகையினை இடது கையால் லேசாகத் துடைத்தார். பிறகு வலம் வந்தார்.

கீழ்ப்பகுதியில் உமைபாலன் டபரா–தம்ளர் முதலியவைகளைச் சுத்தம் செய்து கழுவிக்கொண்டிருந்தான். காலடியில் ஒட்டி உறவாடிய சூட்டைச் சட்டை செய்தால் முடியுமா? சட்டையை உதறி வேர்வையைத் துடைத்தபடி கைவேலையில் முனைந்தான். மகாத்மா காந்தி வீட்டுப்பாத்திரங்களைக் கழுவிய நிகழ்ச்சியையும் அவன் அப்போது எண்ணிப் பார்த்தான்.

‘இங்கே எச்சில் துப்பு’ என்ற பலகை இருந்த இடத்தை நெருங்கினார். எச்சில் துப்பினார். அப்புறம், தூங்கி வழிந்த ஜெயராஜை முதுகில் தட்டி, சாக்குக்கட்டி வாங்கி வரச் சொல்லி, ‘துப்பு’ – என்கிற இடத்தில் ‘ங்கள்’ – என்று சேர்த்துவிட்டு நகர்ந்தார்.

கல்லாச் சாவியை எடுத்துத் திறந்தார்.

அவ்வேளையில் :

“சாமி! தண்டனுங்க!... என் பையன் காத்தான்...நல்ல செகப்புங்க... இங்காலே வந்தானுங்களா?” என்று பரிதாபமாகக் கேட்டான். அவனுக்கு அறந்தாங்கிப் பகுதியாம்! பெயர், சாம்பான்!

கடைக்காரருக்குப் பைசா லாபம் வருகிறது என்றால்கூட, வாய்ச்சோம்பல் படமாட்டார். ஆனால் வந்த ஆள் வாசலிலேயே நின்றதைக் கண்டதும் ஐயருக்கு விஷயம் விளங்கிவிட்டது. உடனே முகம் கோணியது. திரும்பியபடி, “யாரும் அப்படி இங்கே இல்லேப்பா...போ....ஜல்தி!” என்று பதட்டத்துடன் மொழிந்தார் ரேடியோவை ‘டியூன்’ பண்ணினார்.