பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

79


மானத்தைப் பறிக்கிற அளவுக்கு அவன் – என் மகன் பொய் பேசறான், சார்!...பெற்ற தகப்பன் ஐயா நான்!... எனக்கு இவன் முதல் தாரத்துப் பையன். இவனோட தாய் காலராவிலே இறந்த தால், நான் இரண்டாந்தாரம் பண்ணிக்கிட்டேன். அதுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுந்தான். ஒரு நாள் இவனோட சின்னம்மா என்னவோ சொல்ல, இவன் அவளை எதிர்த்துப் பேச. புத்தி தப்பியிருந்த நான் இவனை அடிக்கப் போக, ஐயையோ, இப்ப நான் நிலைகுலைஞ்சு, என் மகனே எனக்கு இல்லைன்னு ஆயிடுமோ என்கிற துர்ப்பாக்கிய நிலையிலே நிற்கிறேனுங்க!... பகவான் என்னை ஏன்தான் இப்படிச் சோதிக்கிறானோ?.... இவனுக்குள்ள சொத்து நாலு தலைமுறைக்குக் காணும் இவன் வந்து இங்கே பெயரை மாற்றிக்கிட்டு, தன்னையும் மாற்றிக்கிட்டு, அடிமை வேலை செய்யனுமா?...சரி!... ரொம்பக் கெட்டிக்காரப் பிள்ளை என் பேரைச் சொல்ல வைப்பான்னு கனவு கண்டேன். ஆனா இப்படி என்னை ஏமாத்துகிறானே!..தெய்வமே!. இதோ பாருங்க, இதுங்களை!.”

மூச்சு இரைத்தது. அவர் கொணர்ந்த முடிச்சை அவிழ்த்தார்.

“எல்லாம் தங்க நகைகள்! எல்லாம் இவனுடையது!.... இது தேதி வச்ச கடிகாரம்!”

ஒவ்வொன்றாகக் காட்டினார். அவன் காணாமல் போனவுடன் அவன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் செய்த தாளையும் காண்பித்தார்.

“தெய்வத்தின்மீது பாரத்தைப் போட்டு விட்டு நீங்க ஊருக்குப்போங்க!...உங்க பையன்தான் இவன். எனக்குப்புரியது. வரட்டும்!... பாசத்துக்கு மகிமை ஜாஸ்தி. நான் உங்க மகனை ஜாக்கிரதையாப் பார்த்துக்கறேன். கவலைப்படாமல் நீங்க போங்க ஊருக்கு...அவன் மனம் சட்டென மாறிவிடும். உம்மோட கண்ணீரைப் பகவான் சீக்கிரமே துடைச்சுடுவார். அவரோட விளையாட்டு வேலையும் அதுவேதானாக்கும்!