பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

91



அடுத்த கால்நாழிகைப் பொழுதில், அரண்மனை அறிவிப்பு மணியின் ஒலி திக்கெட்டும் எதிரொலிக்கத் தொடங்கியது.

ஆம், அன்று அங்கே மந்திராலோசனை சபை கூடப்போகிறது! சற்றைக்கெல்லாம், காவலர்கள் மரியாதையுடன் சிரம் தாழ்த்திட, அவர்களது மரியாதையை மனிதாபிமானத்துடன் ஏற்றுக் கொண்ட பெருமிதத்துடனே, பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் மிடுக்குடன் உள்ளே பிரவேசித்தனர்.


அதோ தலைமை அமைச்சர் அழகண்ணல்! அவரைத் தொடர்ந்தார் ஆஸ்தான கவிஞர் தமிழேந்தி!

இருவரும் உற்ற காவலர்களுடனும் உரிய மரியாதைகளுடனும் இடைவழி கடந்தனர். அங்கு குழுமியிருந்தவர்களின் அஞ்சலிகளை ஏற்றனர்.

தலைமை அமைச்சர் அழகண்ணல். மேனியைத் தழுவிக் கிடந்த பட்டு அங்கியின் நுனி கொண்டு நெற்றிப் பொட்டின் விளிம்பினைத் துடைத்துக்கொண்டே அமர்ந்தார். மன்னர்பிரானின் சிம்மாசனத்திற்குச் சற்றுக் கீழே இருந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்தது அவரது இருக்கை.

கவிஞர் பெருமான் தமிழேந்தியும் அமர்ந்து கொண்டார். முதுமையின் தளர்ச்சியை அவர் மாற்ற முடியாமல் திணறினார்.

மன்னர் வருகை பற்றிய அறிவிப்புச் சொல்லப்பட்டது, அரசாங்கத் தோரணையில்!

சில கணங்கள் கழிந்திருக்கும்.

“மாட்சிமை தங்கிய மாமன்னர் வருகிறார்!..பராக்...பராக்!” என்று ஆரவாரப் பேரொலி கிளம்பியது.

முறையான சடங்குகளின் பிரகாரம் சிருங்காரபுரி தேசத்தின் முழு முதல் காவலர் பூபேந்திர பூபதி வெகு கம்பீரத்துடன் தலைமை மந்திரியின் தகுதிவாய்ந்த ராஜ மரியாதைச் சிறப்புகளை ஏந்தி வந்து தம்முடைய ராஜபீடத்தில் மிடுக்குடன் அமரலானார்.