92
இளவரசி வாழ்க
முதுகுப்புறம் இரு மருங்கிலும் தவழ்ந்த வெண்பட்டுத் ‘துப்பட்டாக்களை’ கைகளில் ஏந்தி நின்றனர் ஏவலாளர் இருவர். வெண்சாமரம் வீசினர் இருவர். மணிமகுடத்தை நாசூக்காக நகர்த்திக் கொண்டு வைரக்கற்களும் நவரத்தினங்களும் கண் சிமிட்டின.
முதல் அமைச்சர் எழுந்து மன்னரின் காதோரம் குனிந்து பவ்யமாக ஏதோ பேசினார். மன்னர் ‘ம்!’ கொட்டினார்.நெற்றியில் சிந்தனைக் கோடுகள் இருந்தன! அரசவைக் கவிஞருக்கு அடையாளம் காட்டப்பட்டது.
தோத்திரப்பா சொன்னர் கவிஞர் தமிழேந்தி :
‘கல்லார்க்குங் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே!
காணார்க்குங் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே’
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில்நின்ற நடுவே!
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே!
எல்லாருக்கும் பொதுவில்நடமிடுகின்ற சிவமே!
என்னரசே! யான்புகலு மிசையுமணித் தருளே!’
பாட்டு முடிந்தது.
அமைதியின் அடையாளத்திற்கென இராமேசுவரம் சங்கு இதமாய் முழங்கியது.
மந்திராலோசனை மண்டபம் பேரமைதி பூண்டது.
மதிப்புக்குகந்த தலைமை அமைச்சர் அழகண்ணல், வேந்தரை வணங்கிட்டுப் பேசத் தொடங்கினார் :
“மரியாதை மிகுந்த கவிஞர் அவர்களும் ஏனைய என் சகாக்களும் இப்பொழுது மிகவும் அவசரமான செய்தி ஒன்றினை அறியப் போகிறார்கள்.