பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

93



மாட்சிமை தங்கிய மன்னர்பிரானது அனுமதியின் பேரில் நேற்றிரவு யாம் நடத்திய அந்தரங்கக் கூட்டத்தின் முடிவின்படி இது தருணம் நீங்கள் அறியக் கடமைப்பட்டதாவது: குணதிசைப் பகுதியில் உள்ள நம் மன்னர் அவர்கட்கு உட்பட்ட சிற்றரசன் வேழ நாட்டு அரசன் விஜயேந்திரன் மாமூலாகக் கட்டக் கடமை கொண்ட கப்பத் தொகையைச் செலுத்த மறுத்துள்ளான். ஆகவே, அவனைப் படை கொண்டு தாக்க வேண்டும் என்பதே நம் புவி முதல்வரின் விருப்பம். இச்செய்தியை நாம் அனைவரும் கருத்திற்கொண்டு, அரண்மனையின் ஆட்சிபீடம் அறிவிக்கும் திட்டப்படி செயற் படுவோமாக!”

பேசி முடித்தார் பெரியவர். முத்து வடமாலை பளிச்சிட்டது.

“மாமன்னர் வாழ்க!...எதிரியை வெல்வோம்!” என்று மண்ணதிர, விண்ணதிர ஒலி எழுப்பனான் பிரதமசேனாதிபதி.

பூபேந்திர பூபதி ஆத்திரம் தொனிக்க எழுந்தார். உட்புறம் நோக்கி அவரது பாதணிகள் நடைபயின்றன!

ஆய்வுக் குழு கலைந்தது.

சுற்றுமதிற் கோட்டையின் நெடு வாயிலில் காவல் இருந்த வாயிற்காப்போன் அரண்மனையின் உட்புறம் நோக்கி அடிக்கடி கண்களைப் பாயவிட்டபடி இருந்தான்.

அடுத்த சில கணங்களில், உட்புறமிருந்து வந்த வெண்புரவிச் சிப்பாய் ஒருவன் அங்கிருந்து விரைந்தேகும் தருணத்தில், “மதிப்புக்குரிய மேன்மை மிகுந்த மகாராணி அவர்களுக்குத் திடீரென்று நோவு தொடங்கி விட்டதாம். சிறுபொழுதில் குழந்தை பிறந்து விடுமாம்!...” என்று செய்தி சொன்னான்.

பதட்டம் ஊர்ந்தது.