பக்கம்:அனிச்ச மலர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அனிச்ச மலர்


"என்னங்க. இது? அம்பது ரூபாயாச்சும் கொடுங்க” என்றாள் அந்த மீனவப் பெண்.

"சினிமாவிலே உன் மூஞ்சியைக் காமிக்கிறதுக்காக நீ எனக்குக் குடுக்கணும் அம்பது ரூபா" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் தயாரிப்பாளர். தண்ணிரில் குதிக்கிற காட்சியை எடுத்து முடித்ததும் கரையருகே கதாநாயகி ஒதுக்கப்பட்டுத் தட்டுத் தடுமாறி எழுந்தி ருப்பது போல ஒரு காட்சி எடுக்கப்படவேண்டும். அந்தக் காட்சிக்காகச் சுமதி திறந்த முதுகுடன் தண்ணிரருகே குப்புறக் கிடக்க வேண்டும். திறந்த முதுகுடன் கிடப்பது பற்றி ஒரு சர்ச்சை மூண்டது. -

"இந்த இடத்தில் திறந்த முதுகு அநாவசியம்” என்றார் ஒருவர்.

'சென் ஸாரில் வெட்டிடு வாங்க” என்றார் மற்றொருவர்.

"அதெல்லாம் வெட்டாமே நான் பார்த்துக்கிறேன். வேணும்னா வெறும் முதுகு வேண்டாம், 'ப்ராவோட முதுகுப் பக்க வார் மட்டும் இருக்கட்டுமே” என்றார் தயாரிப்பாளர்.

அதற்குச் சம்மதமா இல்லையா என்று சுமதியை யாருமே கேட்கவில்லை. சுமதிக்கும் அதற்கு ஆட்சேபணை இல்லைதான். ஆனால் ஒரு சிறிய தயக்கம் இருந்தது. படம் வெளிவந்த பின் அதில் தான் இந்தக் கோலத்தில் தோன்று வதை யாராவது பார்த்து மதுரையில் அம்மாவிடம் போய் இதுபற்றிப் ப்ரஸ்தாபித்தால் வீண் சண்டை வருமே என்றுதான் தயங்கினாள். தன் சந்தேகத்தை மெதுவாக மேரியின் காதருகே நெருங்கிச் சொன்னாள் அவள்.

“உன் சந்தேகம் அனாவசியமானது டீ. சுமதி ! படத்திலே உன் முகமே வராது. முதுகும் ‘ப்ரா’பட்டையும் தான் தெரியும்” என்று மேரி அவளுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/100&oldid=1146915" இலிருந்து மீள்விக்கப்பட்டது