பக்கம்:அனிச்ச மலர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

143

ஒரு கணக்குத் திறந்து வைக்கப்பட்டது. தனக்குத் தரப் பட்ட முதல் செக்கை அந்தக் கணக்கில் போட்டாள் அவள். தொடர்பாகவும் திட்டமிட்டும் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும் அவ்வப்போது அன்று எடுக்கப்பட்ட நடனக் காட்சியைப் போலத் துண்டு துண்டாகச் சுமதியை வைத்து எதையாவது எடுத்தார்கள். அதில் சுமதியை மட்டுமே நடிக்கச் செய்தார்கள். அந்தக் காட்சிக்குப் பலர் பார்வையாளர்களாக அழைக்கப் பட்டார்கள். பலருக்குச் சுமதியும், சுமதிக்குப் பலரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். நிறையப் பெரிய மனிதர்கள், தொழிலதிபர்கள் வீட்டுக்கெல்லாம் சுமதியைக் கப்பல் போன்ற சவர்லெட் காரில் ஒரு வேலையுமின்றி உடனழைத்துக் கொண்டு போய்விட்டு வந்தார் கன்னையா.

காஷ்மீரிலிருந்து திரும்பிய இருபதாவது நாளோ முப்பதாவது நாளோ சுமதிக்கு வழக்கமான லேடி டாக்டர் ஒருத்தியிடம் அஆத்துச் சென்று ஊசி போட்டு மாத்திரைகள் சில வாங்கிக் கொடுத்தாள் மேரி. அதை யடுத்து வீட்டில் உட்காரவேண்டிய நாட்களில் தவறாமல் உட்கார்ந்த பின்புதான் சுமதிக்குப் பயம் போய் நிம்மதி வந்தது.

'சுமதி! நீ எதுக்கும் பயப்பட வேண்டியதில்லை. இந்த லேடி டாக்டர் எங்களுக்கு ரொம்ப வேண்டியவ. யாரிட்டவும் எதையும் சொல்லமாட்டா. ஒரு தடவை இங்கே மேலே டான்ஸ் படிக்க வந்த பொண் ஒருத்திக்கு ரெண்டு மாசமோ மூணு மாசமோ கர்ப்பமே ஆயிடுச்சு. டான்ஸ் மாஸ்டர் கையைப் பிசைஞ்சுக்கிட்டு நின்னான். அந்தப் பொண்ணு 'கிணத்துலே குதிச்சுச் சாகப் போறேன்னு' அழுதது; இந்த லேடி டாக்டரிட்டக் கூட்டிக்கிட்டுப் போய்த்தான் சரிப்படுத்தினேன்” என்று மேரி கூறினாள். அவள் தன்னைத் தைரியப்படுத்து கிறாளா அல்லது மேலும் மேலும் தாராளமாகத் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/145&oldid=1147359" இலிருந்து மீள்விக்கப்பட்டது