பக்கம்:அனிச்ச மலர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

157


கட்டுப்படாத-என் வார்த்தைகளைக் கேட்கத் தயாராயில்லாத ஒரு பெண்ணுக்கு நான் கடிதம் எழுது வதற்குக்கூடக் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் சொல்ல வேண்டியதைக் கடைசியாகச் சொல்லித் தீர்த்து விடுவது நல்லதென்றுதான் இதை எழுதுகிறேன். அப்புறம் உனக்குத் தலை முழுகிவிடலாம்.

அங்கே யோகாம்பாள் அத்தை வீட்டிலிருந்து நேற்றுக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி நீ அவர்கள் வீட்டில் தங்கிக் கொண்டு படப்பிடிப்புக்குப் போய் வருவது என்ற நிபந்தனையை மீறி விட்டாய் என்றும், இரவில்கூட அவர்கள் வீட்டுக்குத் தங்க வருவதில்லை என்றும் எழுதியிருக்கிறார்கள். உன்னைப் பற்றி அவர்கள் ஜாடைமாடையாக எழுதி யிருப்பதை எல்லாம் படித்தால் எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருக்கிறது. உன்னைப் போல் ஒர் அடங்காப் பிடாரியை - ஊர் சுற்றியை - ஒடு காலியைப் பெண்ணாகப் பெற்றதற்காக நான்தான் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும். என்னை விசாரிக்கிற நாலு பேருக்கு இனிமேல் நான் மானமாகப் பதில் எதுவும் சொல்ல முடியாது. நீ என் பெயர், குடும்பப் பெயர் எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டாய் உன்னால் எனக்கு ஏற்பட்டுவிட்ட தலைக்குனிவு இனிமேல் நான் செத்தால் கூடத் தீராது போலிருக்கிறது. சாவும் வரும் வழியாயில்லை.

மென்மையான பெண் என்பவள் அனிச்சமலரைப் போல் வேற்று மனிதர்களின் வெப்பமான மூச்சுக் காற்றால் மோந்துப் பார்க்கப்படுகிற போதே வாடிவிடக் கூடியவள். பிறர் முகம் திரிந்து நோக்கும் அளவுக்கு வாடி விடக் கூடிய ஒரு பெண் பிறகு திருந்தவோ, தேரவோ, மலரவோ முடியாது. மலர்வதற்கு முன்பே வாடுவதற்கு நீயாக முடிவு செய்துகொண்டுவிட்டால் நாங்கள் எப்படி அதைத் தடுக்க முடியும்? அரும்பாக இருந்தாலாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/159&oldid=1147383" இலிருந்து மீள்விக்கப்பட்டது