பக்கம்:அனிச்ச மலர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அனிச்ச மலர்


'அடிǃ சுமதி நீதானே அன்றொரு நாள் என்னிடம் வீறாப்புப் பேசினே? நீ அப்படி வீறாப்புப் பேசினாப்பவே என் வழிக்கு வராமல் போகமாட்டேன்னு எனக்குத் தெரியும். இப்போ பண முடை வந்ததும் நீ தானாகவே என் வழிக்கு வந்துட்டே'- என்று பணத்தைக் கொடுப்பதற்கு முன்பாகவோ, பணத்தைக் கொடுத்த பின்போ அவள் சொல்லிக்காட்டிவிடுவாள் என்று சுமதி பயந்தாள். மேரி அவள் பலத்தைப் பொய்யாக்கிவிட்டாள். ஆனாலும் மேரியின் நிதானத்தைப் பற்றிய சந்தேகம் இன்னும் சுமதிக்கு இருந்தது.

மேரி பணம் கொடுத்துவிட்டுப் போன தினத்துக்கு மறுநாள் காலை, முதல் வேலையாக அதை மணியார்டர் செய்து எம்.ஒ. ரசீதைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டாள் சுமதி.

சுமதி தனக்கு உடல்நலமில்லை என்ற பெயரில் மறுநாளும் வகுப்புகளுக்கு மட்டம் போட்டுவிட்டாள். விண்ணப்பத்தாளைப் பூர்த்தி செய்துகொண்டு பணத்தோடு நேரில் போகலாமென்றுதான் முதலில் அவள் நினைத்தி ருந்தாள். ஆனால், அன்று ஃபோன் செய்து பேசியபோது எம்.ஓ. ரசீதையும் விண்ணப்பத்தையும் அனுப்பினாலே போதுமானது-பின்பு நாங்கள் இண்டர்வ்யூவுக்குக் கூப்பிடும்போது வந்தால் போதும்-என்று நாடகக் குழுவைச் சேர்ந்த அவர்கள் சொல்லிய விதம் நேரில் வர வேண்டாம் என்பது போலிருந்தது. ஆகவேதான் போகும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, முதலில் எம்.ஓ. செய்திருந்தாள் அவள்.

நாடகக் கம்பெனியின் அச்சிட்ட விண்ணப்பத்தில் 'இடையளவு', 'மார்பளவு’ எல்லாம் கேட்டிருந்தார்கள். கல்லூரி வாயிலில் இருந்த ஒரு தையற் கடையில் வேலைக்காரி மூலம் ஒரு ரூபாய் கொடுத்து ஒர் இஞ்ச்டேப்பை அரைமணி இரவல் வாங்கி வந்து, பாத்ரூம் கதவைத் தாழிட்டுக்கொண்டு தனக்குத்தானே சுமதி அந்த அளவைகளைப் பார்த்தாள். விண்ணப்பத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/36&oldid=1133098" இலிருந்து மீள்விக்கப்பட்டது