பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அன்னக்கிளி


எல்லோரும் திகைத்தனர். அன்னம் திடுக்கிட்டாள். 'இதென்ன அதிசயம்?' என்று கேட்பவள்போல் அமுதவல்லி அவளை ஏறெடுத்துப் பார்த்தாள்.

'அவனுக்கு அன்னக்கிளி பேரில் ஆசை; கொள்ளை ஆசை. தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி அவன் இவளிடம் ஒரு தடவை கேட்டான். இவள் மறுத்ததோடு அவனை அவமதித்து விரட்டினாள். அது முதல் அவன் இவளை எப்படியும் அடைந்து இவளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறான்...'

'நேற்று இரவில் தோப்பில் மரத்தின் பின்னால் பதுங்கி நின்று மெதுமெதுவாக வீடு நோக்கி வந்தவன் உன் மகனாகத்தான் இருக்கவேண்டும். கதவின் பின்னால் இருளில் ஒண்டிக்கிடந்து ஆந்தையிடமிருந்து தப்பி ஓடிவந்த அன்னத்தைத் தூக்கிச் சென்றவனும் அவனாகத்தான் இருக்கவேண்டும்...'

'இருக்கலாம் அம்மா. அது எனக்குத் தெரியாது...'

'இது பற்றி நீ ஏன் முன்பே என்னிடம் அறிவிக்க வில்லை?' என்று சீற்றம் காட்டினாள் தலைவி.

'என் மகன் தண்டனைக்கு ஆளாகக் கூடாதே என்ற கவலைதான் அம்மா?' என்று தீனக் குரலில் தெரிவித்தாள் தாய்.

அமுதவல்லி அவளை எச்சரித்து வைத்தாள். அவளைக் கண்காணிக்கும்படி தகுந்த நபர்களை ஏற்பாடு செய்தாள். இருட்டும் வேளையில் அவளுக்குப் பதிலாக வேறு ஆள் மூடி முக்காடு இட்டுக்கொண்டு மூட்டையோடு செல்ல