பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

109

 இவள் நம்மை நம்பி வாழ வேண்டிய பெண்தானே என்பதற்காக அமுதவல்லி என்ன பழி வேண்டுமானாலும் சுமத்த முடிகிறது. அதைக் காரணமாக்கி அவள் என்ன தண்டனை வேண்டுமாயினும் தர முடியுமே! என்னை அவள் வீட்டை விட்டுத் துரத்துவாள். ஆந்தையும் வெறியனும், அவனைப் போன்றவர்களும் சுற்றித் திரிகிற இந்த உலகத்திலே நான் எப்படிப் பிழைக்க முடியும்...?'

அன்னம் அனல் மூச்சு உயிர்த்தாள். அவள் இந்த உலகத்தையே வெறுத்தாள், ஆகவே அவள் கடலை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் - அமைதியின்றிப் புரளுகின்ற மாக் கடலின் மடியிலே அடைக்கலம் புகலாம் என்று. அவளை அறிந்தவர்கள் எதிர்ப்பட முடியாத பாதையைத் தேர்ந்து நடந்தாள் அவள்.

அதுவரை அன்னக்கிளியை வாழ்க்கைத் தீயில் புடம் போட்டுக் கருக்கிக்கொண்டிருந்த காலம், அவளது எதிர் காலத்தைப் பொன்மயமானதாய்த் தகதகக்கும்படி மாற்றி விடத்திட்டமிட்டிருந்தது என்பதை அவள் எவ்வாறு அறிவாள்? அன்றொரு நாள் மாலையிலே குதிரைமீது வந்த இளைஞனின் கண்ணோடு கண்கள் உறவாட ஏற்பட்ட வாய்ப்புதான் அவளது வளமான வாழ்வுக்கான பொன் உதயம் என்பதை அவளோ, அமுதவல்லியோ கணக்கிடவில்லைதான்.

ஆனால், சந்தர்ப்பம் அன்னக்கிளிக்கு நற்றுணையாய் நின்று அருள்புரிந்து வந்தது. இப்பொழுதும் அதுவே உதவி செய்தது.

துறைமுகத்தை அடுத்த திருப்பத்தில் அன்னக்கிளி வேகமாய்த் திரும்ப முயன்றபோது, அவளை மிதித்து