பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

35

 அன்னம்; ஏன் இப்படிக் கத்துகிறாய்? வாயை மூடிக் கொண்டு கிடக்கிறாயா? இல்லை, உன் கழுத்தை நெரித்துக் கொல்லட்டுமா?’ என்று கர்ஜித்தான்.

'ஏன் என்னை இப்படித் தூக்கிச் செல்கிறாய்? என்னை எங்கள் வீட்டில் கொண்டுபோய் விடு!’ என்றாள் அன்னக்கிளி.

அவன் அவளுக்கு விளக்கம் கூற விரும்பாதவனாய், வண்டியை விரட்ட முயன்றான். அவளோ மீண்டும் கூச்சலிட்டு ஒசைப்படுத்தலானாள்.

அந்தச் சமயத்தில்தான் இரண்டு குதிரை வீரர்கள் அங்கு வந்தார்கள். 'என்ன இது? என்று அதட்டினான் ஒரு வீரன்.

வண்டியோட்டி வாய் திறவாது வண்டியைச் செலுத்த முற்படவும், ஒரு வீரன் வண்டிக்கு முன்னே தனது குதிரையைச் செலுத்தி வழி மறித்தான். 'திருமலை அவனை நன்றாகக் கவனி!' என்றான். அவன் திருமலைக்கொழுந்துவின் நண்பன் மருது பாண்டியனே ஆவான்.

திருமலை, வண்டியோட்டியின் முதுகில் தனது கைப் பிரம்பினால் இரண்டு அடிகள் கொடுத்தான். அவன் பிரம்பு உற்சாகத்தோடு துள்ளித் துள்ளி விளையாடத் தொடங்கவும், அந்நியன் 'ஐயோ...அம்மா...அப்பா' என்று துடிதுடித்தான்.

'இதுவே தக்க தருணம்' என அறிந்த அன்னக்கிளி,வண்டியின் கதவைச் சிறிதே திறந்து கொண்டு, தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள். தன்னைக் காப்பாற்ற வந்த குதிரை வீரனைக் கண்டதும், 'ஆ!' என்று உவகை மேலீட்டால் கூவினாள்.