பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சீன நாட்டிலே சக்கரவர்த்தி ஒருவர் இருந்தார். உலகத்திலேயே மிகவும் அழகான அரண்மனையில் வசித்து வந்தார். அரண்மனை முழுதும் நேர்த்தியான பளிங்கினால் கட்டப் பெற்றது. அதை எந்தப் பக்கத்தைத் தீண்டுவதாயிருந்தாலும், மிகவும் எச்சரிக்கையுடன்தான் செய்யவேண்டும்; இல்லாவிடின் பளிங்கு உடைந்து விடும். நந்தவனத்தில் அபூர்வமான பல பூச்செடிகள் இருந்தன. அவைகளில் மிகவும் அழகுடைய செடிகளில் சிறு வெள்ளிச் சலங்கைகள் கட்டப்பெற்றிருந்தன. காற்று வீசும் பொழுதெல்லாம் அந்தச் சலங்கைகள் ஒலிக்கும். உடனே பக்கத்தில் செல்பவர்கள் செடிகளைத் திரும்பிப் பார்ப்பார்கள். தோட்டம் முழுதுமே அளவற்ற கவனத்துடனும், அழகுணர்ச்சியுடனும் அமைக்கப் பெற்றிருந்தது. வரிசை வரிசையாக வண்ணமலர்ச் செடிகள் இருந்தன. இடையிடையே மரங்களும், அவைகளைச் சார்ந்து வளரும் கொடிகளும் கண்களுக்கு இனிய விருந்தாயிருந்தன. தோட்டத்தின் எல்லை எது என்று தோட்டக்காரனே அறியமுடியாத நிலையில் அது அவ்வளவு பெரியதாயிருந்தது.