பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெறி பிடித்த வெள்ளையரும்
காந்தியும்



ராஜ்கோட் நகரில் தொழில் செய்து வந்த பாரிஸ்டர் காந்திக்குப் போதிய வருவாய் வரவில்லை. பம்பாய் சென்றால் வருமானம் வருமென்று அங்கிருந்த வழக்குரைஞர்கள் காந்தியிடம் கூறினார்கள்.

வந்தார் பம்பாய்க்கு காந்தி! இங்கும் அவருக்குரிய வருமானம் கிடைக்கவில்லை. வழக்குரைஞர் பணி புரிவோருக்கு அச்சம் அரும்பக்கூடாது. சட்டத்தின் சந்நிதானத்திலே கம்பீரமாகப் பேசும் தொனி இருக்க வேண்டும். எள் மூக்களவும் கூட கூச்ச சுபாவம் இருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, எங்கும் எப்போதும் எவரிடமும் சரளமாக வாதாடும் திறமையும் அமைய வேண்டும்.

இந்தியாவில் படித்த வழக்குரைஞருக்கே இந்த அளவுகோல் என்றால், இங்கிலாந்து போய் சட்டம் படித்து விட்டு வந்த ஒரு பாரிஸ்டருக்கு இவற்றை விட அதிகத் திறமை இருந்தால் தானே, வரம்பற்ற வருமானம் வர வழி பிறக்கும்!

காந்திக்கு எப்போது பார்த்தாலும், சங்கோஜ சுபாவமும், அச்சத்தால் அஞ்சும் குணமும் குடிகொண்டு இருந்ததாலும், அவரது தோற்றமும் அவருக்குச் சரிவர ஒத்துழைக்காததாலும், அவரால் புகழ் பெற்ற பாரிஸ்டராக வர முடியவில்லை. அதனால், அவருக்குப் போதிய வருமானம் இல்லை; வீண் செலவு தான் மிச்சமாக இருந்தது மீண்டும் காந்தி ராஜ்கோட் நகருக்கே திரும்பி விட்டார்.