பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

25




’நீ செய்துதான் ஆகவேண்டும்’ என்று ஆங்காரமாக உரத்த குரலில் பேசினார் காந்தி. ஒருநாள் கிறிஸ்துவர் ஒருவர் காந்தி வீட்டில் வந்து தங்கினார். அவர் நேட்டால் நகருக்குப் புதியவர். அவருடைய படுக்கை அறையை சுத்தப் படுத்துவதைக் காந்தியோ, கஸ்தூரிபாயோ செய்து வந்தார்கள். மல ஜலம் கழிக்கும் பீங்கான் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதையும் கஸ்தூரி பாய் தயக்கமின்றி காந்திக்குப் பயந்து செய்தார்.

ஆனால் ஹரிஜனன் ஒருவருடைய மல ஜலம் கழித்த பீங்கான் பாத்திரத்தைக் கழுவிச் சுத்தம் செய்ய கஸ்தூரி பாய்க்கு மனம் இடம் தரவில்லை. தான் மட்டுமல்ல; தனது கணவர் காந்தியும் அந்தப் பணியைச் செய்ய அவர் விரும்ப வில்லை. இதனால் கணவருக்கும் மனைவிக்கும் சண்டையும் சச்சரவுகளும் மூண்டன. இருப்பினும், கஸ்தூரி பாய்தான் அப்பீங்கானைக் கழுவ வேண்டும் என்று காந்தி கட்டளையிட்டார்.

கஸ்தூரிபாய் கண்கள் நெருப்புக் கோளமாகச் சிவந்து விட்டன; மளமளவென்று கண்ணிர் சிந்தினார். மனவேதனையுடன் கஸ்தூரி பாய் பீங்கான் பாத்திரத்தைக் தூக்கிக் கொண்டு படியிறங்கி வரும்போது; காந்தி மனைவியை கோபக் கண்களுடன் பார்த்து ஆத்திரப் பட்டார். இது போன்ற வேலைகளை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டுமே தவிர, வெறுப்புடன் முகம் சுளித்துக் கொண்டு அருவருப்பாக எனது வீட்டில் செய்யக் கூடாது என்று இரைச்சலிட்டுப் பேசினார் காந்தி.

இதைக் கேட்ட கஸ்தூரி பாய் பொறுமை இழந்து, "அப்படியா உங்கள் வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; நான் போகிறேன்" என்று எதிர்த்து கூச்சலிட்டுக் கத்தினார்.