பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

35


மகிழ்ச்சியும் பெற்றார். மனைவியிடம் தனக்குள்ள அன்பு, பாசம், பிடிப்பு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டிட இதுதான் தக்க நேரம் என்று உணர்ந்தார்!

”கஸ்தூரி, நான் நோயாளியாக இருந்து எனக்கு மருத்துவர் உப்பு மசாலாவை மட்டுமல்ல, வேறு எந்தப் பொருளையும் கைவிடு என்பாரேயானால், நான் உறுதியாக அவற்றைத் தொடமாட்டேன்.

”எனக்கு மருத்துவர்கள் யாரும் அவ்வாறு கூற வில்லையே! இப்போது நான் கூறுகிறேன் கேட்டுக் கொள்; இன்று முதல் ஓராண்டு காலத்திற்கு நான் உப்பையும், மசாலாவையும் தொடமாட்டேன். நீ அவற்றைக் கைவிடுகிறாயோ இல்லையோ, நான் நிச்சயமாக அப்பொருள்களைச் சுவைக்க மாட்டேன்” என்று உறுதிபட மனைவியிடம் உரைத்தார்.

திடுக்கிட்டார் கஸ்தூரிபாய்! ”தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். உங்களுடைய சுபாவம் நான் அறிந்ததே ஐயோ, தெரியாமல் இப்படி உங்களைக் கோபமடையச் செய்து விட்டேன்! நான் இன்று முதல் உப்பையும் மசாலாப் பொருட்களையும் உண்ண மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கின்றேன். நீங்கள் உங்களுடைய சபதத்தைக் கைவிடுங்கள். அதனை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கண்ணிர் சிந்தினார் கஸ்தூரிபாய்.

உடனே காந்தியடிகள் அரைகுறையான பச்சாதாபத் தோடு, ”கஸ்தூரி, உனது உடம்பு நலமாகத்தான் நான் கூறுகிறேன். எனக்குக் கூட வருத்தமாகத்தான் இருக்கிறது. சுவையோடு உண்டவர்களுக்கு இது ஒரு சோதனை தான்; என்ன செய்வது?

”உப்பையும், மசாலாப் பொருட்களையும் நீ சேர்த்துக் கொள்ளாவிட்டால் உனது வியாதி உன்னை விட்டு நீங்கும்;