பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

51



கணவர் காந்தி பொது வாழ்க்கையில் தோல்வியுறும் போது எளிமையுடனும், அஞ்சா நெஞ்சத்துடனும், கம்பீரத்துடனும் ஆடியோடி கஸ்தூரிபாய் பணியாற்றினார். அது போலவே, அவர் வெற்றி வீரராக விளங்கிய நேரத்திலும், கம்பீரத்தோடும், கண்ணியத்தோடும், எளிமை யோடும், எவரிடமும் பற்றும் பாசத்தோடும் பழகும் மாதரசியாகவும் அவர் காட்சி தந்தார்.

தென்னாப்ரிக்க ஃபினிக்ஸ் செட்டில்மெண்ட் ஆசிரமத்தில் வாழ்ந்ததற்கு மாறாக, சபர்மதி ஆஸ்ரமத்தில் ஒரு திண்டு மீது சாய்ந்து காந்தி உட்கார்ந்திருந்தார். காந்தியடிகள் அப்போது உடல் நலம் குன்றி, கொட்டைகளையும், பழவகைகளையும் ஆகாரமாகக் கொண்டு மெலிந்து நலிந்து காணப்பட்டார்.

"அன்னை கஸ்தூரி பாய் தென்னாப்பிரிக்காவின் சட்ட மறுப்புப் போராட்டத்தில் எப்படிப் பணியாற்றினாரோ, அதே மனஉறுதியோடு இந்திய விடுதலைப் போராட்டத்திலும், குடும்ப சம்பந்தமான விவகாரங்களிலும் ஈடுபட்டுக் கம்பீரமாகப் பணியாற்றி வந்தார். இப்படிப்பட்ட ஆசிரம சேவையே தனக்குப் போதுமானது; உகந்தது என்ற அளவில் அன்னை கஸ்தூரிபாய் தோற்றமளித்துக் கொண்டிருந்தார்" என்று கவிக்குயில் சரோஜினி தேவி ஆசிரமம் சென்று அதை நேரில் பார்த்தபோது கூறி வியப்புற்றார்.

சரோஜினி தேவி பின்னர் அன்னையைப் பற்றிய தனது வருணனையில், "ஆசிரம அமைப்புக்காக விதிகளை எழுதும் போதே, தாழ்த்தப்பட்ட ஹரி ஜனங்களையும் ஆசிரமத்தில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று எல்லா உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டார்கள்.