பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

63



"சர்தார் வல்லபாய் படேலிடம் இது பற்றி யோசனை கேட்டேன். அவள் போராட்டத்தில் கலந்து கொள்வதை அவரும் விரும்பவில்லை. ஆனால், அவரும் இறுதியில் ஒப்புக் கொண்டார்'.

"கஸ்தூரிபாய், ராஜ்கோட்டுப் பெண். அந்த ஊராருக்காகப் போராட வேண்டியது தனது கடமை என்று எண்ணினாள். அந்த சமஸ்தான மக்களின் சுதந்திரத்துக்காக, ராஜ்கோட்டைச் சேர்ந்த மற்ற பெண்கள் துன்பப்படும்போது அவளால் சும்மா இருக்க முடியவில்லை.

"ராஜ்கோட் போராட்டத்தின் வெற்றி; விடுதலைப் போரிலே நாம் ஒரு படி முன்னேறியதைக் குறிப்பிடும். இப்போதோ, சிறிது காலம் கழித்தோ வெற்றி கிடைப்பது உறுதி; அந்த வெற்றி கிடைக்கும் போது அதற்காகக் கஸ்தூரிபாயும் தனது பங்கைச் செலுத்தினாள் என்று மக்கள் எண்ணுவார்கள். சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வயது முதிர்ந்தவர்களும், பலவீனமாக உள்ளவர்களும் பங்கேற்கலாம். ஆனால், அவர்களுக்கு நெஞ்சில் உரம் இருக்க வேண்டும்” என்று காந்தி எழுதினார்.

ராஜ்கோட் போராட்டம் மக்கள் இடையே பரபரப்பும் தீவிரமுமாய் பரவியது. இதைக் கண்ட காந்தியடிகள் 'சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்’ என்றார். அப்போது கஸ்தூரிபாய் இதே ராஜ்கோட் போராட்டத்துக்காக சிறையில் இருந்தார்.

கணவரின் உண்ணாவிரத முடிவைக் கேள்விப்பட்ட அன்னை கஸ்தூரிபாய், மிகவும் வேதனையடைந்தார்; கண் கலங்கினார். தம்மைக் கேட்காமல் உண்ணா விரதம் தொடங்கியதற்காக, பணிவுடன் கோபம் கொண்டு ஓர் மடலை காந்தியடிகளுக்கு எழுதினார்.