பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அன்னை கஸ்துரிபாயின்




அதற்கு மகாத்மா எழுதிய பதில்: "வீணாக நீ கவலைப்படுகிறாய். கடவுள் ஒரு வாய்ப்பு அளித்துள்ளார். அது பற்றி நீ மகிழ வேண்டும். நான் உண்ணாநோன்பு இருக்கப் போவது எனக்கே தெரியாது. அவ்வாறிருக்க, தான் உன்னையோ மற்றவர்களையோ எப்படிக் கலந்து கொண்டு பேச முடியும்?

"உண்ணா நோன்பு இருக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார் கடவுள். அவருக்குக் கீழ்ப்படியாமல் நான் என்ன செய்ய முடியும்? வருவது வந்தே தீரும். அவ்வாறு அவர் என்னை உரிமையுடன் அழைக்கும் போது, வரமாட்டேன் என்று நிற்க முடியுமா? அல்லது உன்னையோ, மற்றவர்களையோ யோசனை கேட்கத்தான் முடியுமா?

மகாத்மா இந்தப் பதிலுடன் திருப்தி பெறவில்லை. அவர் உண்ணாவிரதம் இருக்கும் போதெல்லாம் பக்கத்தில் இருந்து கஸ்தூரிபாய் பணிவிடை செய்பவர் என்பதால், இப்போது இருக்கும் உண்ணாவிரதத்திலும் உடனிருந்து பணிவிடை செய்ய அவர் விரும்பலாம். அவ்வாறு அவருக்கு விருப்பம் இருந்தால் அதற்கு ஏற்ப அவரைச் சிறையிலே இருந்து விடுதலை செய்யுமாறு சமஸ்தான அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்யலாமா? கஸ்தூரி பாயின் விருப்பம் என்ன என்பதை அறிய சிலரை காந்தி அனுப்பி வைத்தார்.

"வேண்டாம், வேண்டாம். எனது கணவர் உண்ணாவிரதம் பற்றியும் அவரது உடல் நிலை இருக்கும் விதம் குறித்தும், எனக்கு அடிக்கடி தகவல்கள் தந்தால் போதுமானது. இதற்கு முன்னர் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது காப்பாற்றிய கடவுள், இப்போதும் அவரைக் காப்பாற்றுவார். என்றாலும், ஒருவர் இப்படி அடிக்கடி அபாயத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. என்று கஸ்தூரிபாய், சிறைக்கு தூது வந்தவர்களிடம் சொல்லி அனுப்பிவிட்டார்.