பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

83



"நாம் எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தாம் தாயே! இதனால் என்ன?" என்றார் சுசீலா!

இதற்கு கஸ்தூரிபாய், 'ஆமாம், உண்மை தான்' என்பது போல தனது தலையை மட்டுமே ஆட்டினார், பாவம்!

கொஞ்ச நேரம் கழிந்த பின்பு, சுசீலா சொல்லி அனுப்பியதற்கு ஏற்றவாறு காந்தியடிகள் வந்தார். சிறிது நேரம் மனைவி அருகே நின்று கொண்டிருந்தார். பின்பு, அவர், தனது மனைவியிடம் நான் உலாவப் போகட்டுமா பாய்? என்று கேட்டு விட்டு நின்று கொண்டே இருந்தார்.

வழக்கமாகக் காந்தியடிகள் கஸ்தூரி பாயிடம் எதுவும் கேட்கும் போது, கஸ்தூரிபாய், ஒரு நாளும் தடுக்கவோ, அல்லது மறுப்போ, மறுபதிலோ ஏதும் கூறமாட்டார். ஆனால், அன்று அவர் தடுத்தார்!

காந்தியடிகள் கட்டிலின் மேலே உட்கார்ந்தார். தனது கணவரின் தோள்மீது தலை வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டே இருந்தார். அப்போது கணவன் மனைவி இருவர் முகங்கள் இடையே ஏதோ ஓர் அதிர்ச்சியும். அன்பின் அமைதியும், அக நெகிழ்ச்சிகளும் அவர்களையே அறியாதவாறு நிகழ்ந்தன.

இந்த இருவரது உள்ள உருக்க உணர்வுகளை உணர்ந்து அந்த அறையில் இருந்தோர் அனைவரும், ஒலி எழாமல் அவரவர் பாதங்களில் இலவம் பஞ்சு கட்டிக் கொண்டு நடப்பதை போல, மெதுவாக நடந்து நகர்ந்தார்கள். அந்தக் காட்சி, அந்த நேரத்தில், ஏதோ முழு நிலா ஒளியிலே இரண்டு அன்னப் பறவைகள் தங்களது சிறகுகளால் மரண வருடல்களை நெருடுவது போன்ற கண்கொள்ளாக் கண்ணிர்க் காட்சியாக அந்த தேசபக்தப் பறவைகளுக்குத் தென்பட்டது.