பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

மேற்பரப்பிலே, அவன் கருத்துக்கு இனித்த கல்யாணக் காட்சியொன்றைக் கண்டான். ‘வா, ஓடோடி வா!’ என்று இதழ் விலக்கி, கண் காட்டி, கை அசைத்து நிலவுக் குழந்தையின் விண்ணப்பத்துக்கு இணக்கச் சொன்ன முகிற்துண்டு வருகிறேன். இதோ வருகிறேன்! என்று சொல்லியவாறு விரைந்து கொண்டிருந்தது. மங்கிய அந்நிலவொளியிலும் அற்புதம் இணைந்த வதுவைக் கோலத்தைப் பார்த்தான். பார்த்த விழிக்கணை முனையில் பனித்துளிகள் தொங்கின. எண்ணினான், சிந்தையைச் சிந்திக்க வைத்த அந்தப் பேச்சு அவனுடைய மனக்கண்ணில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. படித்தான், கேட்டான். உள்ளம் நிறைந்த சிலம்பின் கதை, காதை காதையாக ஏடு மலர்ந்தது.

கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம்,

‘நீல விதானத்து நித்திலப் பூப்பந்தரின் கீழ் வீற்றிருந்த கோவலனும் கண்ணகியும் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீ வலம் வந்து கண்வன் மனைவியாக ஆயினராம்...!

"ஆஹா!"

தன் நினைவுடன் நற்சாட்சி வழங்கினான் மாமல்லன். கைவிரல்கள் சுருட்டைத் தலைமயிரை கோதிவிட்டன. வேர்வை புள்ளி அமைத்து கோலமிட எண்ணியது. அவன் அதைக் கலைத்தான் கன்னங்களில் படர்ந்த கைவிரல்கள் கண்களருகே சென்றதும், அப்படியே பின்தங்கி விட்டன. ஈரம் சொட்டியது, இதயத்தில் ஈரம் இருந்தால்தான் விழிகளிலே ஈரம் இருக்கும். பீலியிலிருந்து உதிரும் நீர்த் திவலைகளாயின, கண்ணீர்மணிகள்.

ஆமாம், 'முதலையுண்ட பாலனை அழைத்த இன்பத் தமிழை சொல்வார். சொல்லக் கேட்கையில் உண்மையாகவே கண்கள் ஆனந்தக் கண்ணிர் தான் வடிக்கின்றன!' என்று மாமல்லன் கருத்துணர்ந்தான்