54
“மாமா இல்லியா, மேகலை?”
‘பட்டணத்திலேயிருந்து மாப்பிள்ளை காரிலே வர்றாங்களாம். அப்பா குளிச்சிட்டு வரப் போயிருக்காங்க அப்படியே மங்காயி பிள்ளை பார் கோயிலுக்குப் போயிட்டுத்தான் திரும்புவாங்க’
‘மாப்பிள்ளை’ என்ற சொற்கள் திருமாறனின் உருவ அமைப்பை எழுதிக் காட்டின. அன்றொரு நாள் தன்னை அவன் சந்தித்ததை நினைவில் உணர்ந்தான். அவன் அரியலூருக்குப் போகப் போவதாக கூறிய செய்தி அவனுக்கு இத்தகைய அர்த்தத்தைக் கற்பிக்குமென்று மாமல்லன் தூங்கும்போது கூட எண்ணியது கிடையாது.
மரகதவல்லி அம்மை மாமல்லனைக் கண்டதும் நிலைப் படியிலிருந்து விலகித் தலையை உள்ளே மறைத்துக் கொண்டாள். “வாங்க!...” என்ற மெலிந்த தொனி உள்ளிருந்து வெளியேறியது.
மேகலை காப்பி கொண்டு வந்தாள். கூடத்தில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்த மாமல்லனிடம் கொடுத்தாள் வேண்டுமென்றே தொட்டுக் கொடுக்க விரும்பியவள் போல கை விரல்கள் அவன் விரல்களுடன் இணையும் வண்ணம் காப்பி டபராவைத் தொட்டு நீட்டினாள். கால் மாத்திரைப் பொழுது இருவரும் மெளனத்தைச் சாட்சி வைத்தார்கள்.
‘இன்றைக்கு மட்டும் காப்பி கொடுத்து விட்டுத் தப்பித்து விடப் பார்க்கிறாயா, மேகலை ?’ என்றான் அவன்.
‘இல்லை. இல்லை, அப்படியெல்லாம் நீங்கள் உங்கள் வாயால் சொல்லா தீர்கள். என் கையாலேயே நித்த, நித்தம் உங்களுக்குக் காப்பி கொடுப்பேன் ! ஆமாம் அத்தான்; என்று விடை பகர்ந்தாள். இள நகையையும் பகிர்ந்து கொடுத்தது இதழ் ஏடு.