பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

27

தன்னையும் ஒரு 'சீர்திருத்தச் செம்மல்’ என்று சொல்லிக்கொண்ட அவர், வயது முப்பதுக்கு மேல் ஆகியும் 'அரை மனித'ராகவே இருந்து வந்தார். அந்த அரை மனிதர் 'முழு மனித’ராக ஒரு பெண்-ஆம், ஒரே ஒரு பெண்தான் வேண்டியிருந்தது. எதையும் எதிர்காலத்தோடு இணைத்துப்பார்க்கும் சமூகம் அவருடைய அசட்டுத்தனத்தை நம்பி, அர்த்தமற்ற ஆண்மையை நம்பி, அந்த ஒரே ஒரு பெண்ணை அவருக்காகத் தத்தம் செய்ய முன்வரவில்லை. அத்துடன் என்னைப் போலவே தாய் தந்தையற்ற அவர், சாட்சாத் தரித்திரத்தை வேறு தன்னுடைய தாயாகவும் தந்தையாகவும், அண்ணனாகவும் தம்பியாகவும், அக்காவாகவும் தங்கையாகவும், மாமாவாகவும் மைத்துனனாகவும் கொண்டு; அதனுடைய மடியிலே தவழ்ந்து, விளையாடி, வளர்ந்து, வாழ்ந்து வந்தார்-இல்லை, பிழைத்து வந்தார்!

இவ்வளவு பெரிய உலகத்தில் வறுமை ஒன்றைத் தவிர வேறெதுவும் தன்னிடம் அன்பு செலுத்தாத போது, தான் மட்டும் ஏன் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும்? அத்தகைய அன்பைப் பிறர் மதிக்காத போது, மதித்து வரவேற்காதபோது, தான் மட்டும் அதை ஏன் மதிக்கவேண்டும்; மதித்து வரவேற்க வேண்டும்?

இந்த விபரீத தத்துவத்தால் வெறுப்படைந்த அவர் உள்ளம், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைப் பணத்தின் துணையாலும் பக்கபலத்தின் துணையாலும் சட்டத்தின் கண்ணையும் சமூகத்தின் கண்ணையும் மூடிவிட்டு, 'மனைமாட்சி' மிக்க மனைவிமாராகவும், 'மனமாட்சி'மிக்க துணைவிமாராகவும் கொண்டு