பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அன்பு அலறுகிறது

கண்டதுமின்றி, ஐயோ, என் லலிதாவைக்,காணோமே! ஐயோ, என் லலிதாவைக் காணோமே!’ என்று வேறு கதறித் தொலைத்தார்!

இதைக் கேட்டதும் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து நான் கதவைத் திறப்பதற்குள் காந்தா என் அத்தானை இழுத்துக்கொண்டுபோய் வெளியே விட்டு விட்டு வந்து, "ஐயோ, பாவம்! என்ன லலிதா, மாப்பிள்ளைக்கு? உன்னைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே ‘என் லலிதாவைக் காணோமே, என் லலிதாவைக் காணோமே!’ என்று கதறுகிறாரே!” என்று ஒரு போடு போட்டுவிட்டுச் சிரித்தாள்.

வெட்கமாய் போய்விட்டது அவருக்கு; விழுந்தடித்துக் கொண்டுபோய்க் கதவைச் சாத்திக் கொண்டுவிட்டார்!

'நல்ல வேளை, பிழைத்தேன்!' என்று நான் பெருமூச்சு விட்டேன்.

கலாசாலைப் பெண்கள் என்றாலே, 'ஸெக்கெண்ட் ஹாண்டாயிருக்குமோ!' என்று மாப்பிள்ளைமார் சந்தேகப்படும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு பிரகிருதி என் மானத்தை வாங்கித் தொலைத்தால் அவர் என்ன நினைப்பார்? இதனால் எடுக்கும்போதே அவருடைய உள்ளத்தில் விஷவித்து ஊன்றப்பட்டுவிட்டால், எதிர் காலத்தில் அதை நான் களைந்தெறிவது எப்படி?

'கடவுளே, அந்த மட்டும் காந்தாவின் உருவில் வந்து என்னைக் காப்பாற்றினீரே!' என்ற நன்றியுணர்ச்சியுடன் நான் திரும்பினேன். "என்ன இருந்தாலும் காந்தா ரொம்ப ரொம்பப் பொல்லாதவள்!" என்றார் என் கணவர்.