பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அன்பு அலறுகிறது


"ஆமாம், ஆமாம். அநியாயத்திலும் அநியாயம்!” என்றாள் மற்றும் ஒருத்தி.

"என்ன இருந்தாலும் இப்படிச் செய்திருக்க வேண்டாம் என்றாள் ஒருத்தி.

"தெரிந்தா செய்தார், தெரியாமல் தானே செய்திருக்கிறார்?" என்றாள் இன்னொருத்தி.

"என்னதான் தெரியாமல் செய்தாலும் இப்படியா?” என்றாள் மற்றொருத்தி.

"அது அப்படித்தான்!” என்றாள் மற்றும் ஒருத்தி.

இந்த 'விமர்சன’த்தைக் கேட்கக்கேட்க அவருக்கு எப்படித்தான் இருந்ததோ, “என்ன சங்கதி, சொல்லுங்களேன்!” என்றார் பொறுமை இழந்து.

"வரவே வந்தீர்கள்; கண்ணாடியில் கொஞ்சம் முகத்தைப் பார்த்துவிட்டு வந்திருக்கக்கூடாதா?” என்றாள் சாந்தா.

"அவர் பார்க்காவிட்டாலும் லலிதாவாவது பார்க்கச் சொல்லியிருக்கலாம்!”, என்றாள் காந்தா.

"அவள்தான் அவளை மறந்துவிட்டாளாமே?” என்றாள் ஒருத்தி.

"ஏன், இவர்கூடத்தான் இவரை மறந்து விட்டாராம்!” என்றாள் இன்னொருத்தி.

"உண்மையாகவா?"என்றாள் மற்றொருத்தி.

"இல்லாவிட்டால் அவள் நெற்றியிலிருந்த குங்குமமெல்லாம் இவருடைய முகத்திலா இருக்கும்:” என்றாள் மற்றும் ஒருத்தி.