அதைக் கவனித்த என் அத்தான் அவரை நோக்கித் திரும்பியதுதான் தாமதம், போலீஸ்காரர் பிடித்தார் ஓட்டம்!
என் கணவர் கலகலவென்று நகைத்தபடி, நல்ல வேடிக்கைதான்; காரில் ஏறிக்கொள்ளுங்கள்!" என்றார், என் அத்தானை நோக்கி.
அவ்வளவுதான்; விழுந்தடித்துக் கொண்டு சென்று அவசரம் அவசரமாக அது காரின் கதவைத் திறக்கமுயன்றது. நான் குறுக்கிட்டு, "என் அத்தானைப் பற்றி உங்களுக்குத் தெரியாது; ரொம்ப ரொமபத் தன்மானம் மிக்கது அது. உங்களுக்குத் தெரியாமல் அது காருக்கு வெளியே உட்கார்ந்தாலும் உட்காருமே தவிர, உங்களுக்குத் தெரிந்து உள்ளே உட்காரவே உட்காராது!" என்று ஒரு போடு போட்டேன்.
இதைக் கேட்டதும் கதவைத் திறக்க முயன்ற அத்தான் அதைக் கைவிட்டுவிட்டு, ஆமாம், ஆமாம். ரொம்ப ரொம்பத் தன்மானம் மிக்கவன் நான்; ரொம்ப ரொம்பத் தன்மானம் மிக்கவன் நான்!" என்று மார்தட்டியவண்ணம் சட்டென்று விறைத்துக் கொண்டு நின்றது!
என் கணவர் என்ன செய்வார், பாவம்! "விஷயம் எதுவாயிருந்தாலும் அது இவருக்கு ஞாபகம் வர வேண்டுமானால், இன்னொருவர் அதை ஞாபகப் படுத்தித்தான தீரவேண்டும் போலிருக்கிறது!" என்றார்.
"ஆமாம், ஆமாம். அதிலும் லலிதா ஞாபகப் படுத்தினால் எனக்கு உடனே ஞாபகம் வந்துவிடும்!” என்றது அத்தான்.