பக்கம்:அன்பு மாலை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

43

பூமிபெரும் காடதனில் உணர்ச்சியிலா மாந்தர்
பொலிகின்ற விலங்கினங்கள், மாயையெனும் அதனுள்
நாமிருப்போம்; இதனிடையே நல்லருளைக் கூட
நயந்திடுவீர், இங்கருணை நகரினிலே உள்ளான்;
சாமியெனக் கும்பிடலாம்; குழந்தையெனக் களித்தே
தயைதன்னைப்பெற்றிடலாம்; அவன்தான்யார் என்றால்
நாமமது ராமசுரத் குமாரன்என வந்தான்;
நலியாமல் காப்பாற்றும் நளினபதத் தானே.

103

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாம்:
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாம்;
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாம்;
நாதாந்த மேல்நிலைமேல் ஞானவடி வோனாம்;
வல்லார்க்கும் வல்லவனாம் மாயோகி அருணை
வாழ்கின்ற பெருமானாம் பேரண்ணல், சாந்தம்
புல்லார்க்குத் தெரிவரியான், ராமசுரத் குமாராம்
புங்கவனை வந்தடைமின், சங்கடங்கள் போமே.

104

புங்கவன் - தேவன்.

கடன்உண்டென் றேமாந்து பொருள்தன்னைத் தேடிக்
காசினியில் காசுக்கே நாள்தன்னை அழிப்பார்;
அடல்உள்ள உடலென்றே இன்பத்தைத் தேடி
அரிவையர்பால் மோகங்கொண்ட ழிவார்கள் பல்லோர்
சுடர்கின்ற நன்ஞானம் வேண்டுமென்றே தேடிச்
சுயமுயற்சி செய்வார்கள் மிகஅரியர் தாமே;
அடர்கின்ற மாஞானி ராமசுரத் குமாரை
அடைமின்கள், நன்னெறியில் செல்லும்வழி யாமே.

105

அடர்கின்ற - செறிகின்ற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/49&oldid=1303503" இலிருந்து மீள்விக்கப்பட்டது