அருளுருவாய்த் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் யோகி ஸ்ரீ ராம்சுரத்குமார் அவர்களைத் தரிசிக்கச் செல்லும் போதெல்லாம் வாய் மொழியாகவே பல பாடல்களைப் பாடுவது எளியேனது வழக்கம். அவற்றை அங்குள்ள அன்பர்கள் டேப் ரிகார்டரில் பதிவு செய்வார்கள்; அவற்றைப் படியெடுத்து எனக்கு அனுப்புவார்கள்.
முன்பு அவ்வாறு பாடிய பாடல்களையும் பேசிய சொற்பொழிவுகளையும் தொகுத்து 'ஜயந்தி மலர்' என்ற பெயரில் வெளியிட்டேன். அவற்றின் பின்பு நான் பேசிய பேச்சையும் பாடிய பாடல்களையும் தொகுத்து 'அன்பு மாலை' என்ற பெயரில் இப்போது வெளியிடும் வண்ணம் திருவருள் கூட்டுவித்தது. "பாட்டுவித்தால் ஆரொருவர். பாடாதாரே?" என்பது அப்பர் சுவாமிகள் திருவாக்கு.
முருகன் திருவருளாலும், சுவாமிகளுடைய கருணையாலும் இந்தச் சிறு நூல் வெளியாகிறது. "பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?" என்று கம்பரே சொல்லும் போது இந்த எளியேன் எம்மாத்திரம்?
8-1-80
கி. வா. ஜகந்நாதன்
1-a