60
அன்பு மாலை
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
வேதனைகள் போக்குதற்கே எண்ணம் கொண்டால்
வீறுகின்ற மாயையினை ஒழிக்க வேண்டின்
சாதனைகள் புரிவதற்கே நெஞ்சம் கொண்டால்
சாந்தியிந்த உலகத்தில் எய்த வேண்டின்
போதமுறும் பெருவாழ்வில் புகநீர் வேண்டின்
புத்தமைதி காணுதற்கே எண்ணம் கொண்டால்
நாதனிவன் ராமசுரத் குமார்தன் மாட்டே
நணுகிடுமின்; உள்ளமெலாம் அமுதம் சேரும்.
போதம் - ஞானம்.
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி ஏங்கி
எந்நாளும் நெஞ்சமெலாம் புண்ணாய்ப் போக
மண்ணாளும் வாழ்வினிலே ஏது கண்டீர்?
வானவரும் காணாத இன்பம் காணத்
திண்ணாளும் நெஞ்சமுளார் வந்து போவார்:
திருவடியை வணங்கிநலம் பெற்றே சேர்வார்;
கண்ணாளன் ராமசுரத் குமார யோகி
கழலடியே தஞ்சமென வந்தார் நல்லோர்.
மாயையெனும் பாம்பினையே மடியச் செய்வான்;
மாமோகம் எனும்பேயை மடித்து நிற்பான்;
தூயவர்கள் நெஞ்சகத்தில் கோயில் கொள்வான்;
சுகசொரூபம் ஆகியே எங்கும் நிற்பான்; தாயனையான்; தந்தையினைப் போல உள்ளான்;
தாழ்வார்க்குப் பால்தந்தே நலங்கள் செய்வான்;
நாயகனாம் ராமசுரத் குமார ஞானி
நளினஅடி தஞ்சமென்றே புகுவார் நல்லோர்.