பக்கம்:அபிதா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா 0 5


ஒரொரு சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. அன்று பட்டினியில், சத்திரத்துத் திண்ணையில் அண்ணாந்து படுத்து விட்டத்தில் என் விதியேட்டைச் சரியாகத்தான், என்னை அறியாமலே படித்திருக்கிறேன்.

விளக்குக்கு ஏற்றினால் வெளிச்சம்.

ஆனால் விடிவு என்னவோ வேளையில்தான்.

பிறகு ஒரு நாள் மாலை, என்னை அவர் வீட்டுக்குக் கூட்டிப்போய், ஊஞ்சலில் தனக்குச் சரியாக உட்கார வைத்துக்கொண்டு:

“சாவித்ரீ! டிபன் கொண்டு வா!” என்று அழைத்து அவள் வந்ததும் :

“சாவித்ரீ! நமஸ்காரம் பண்ணு. பின்னால் இவன் உனக்குத் தோப்புக் கரணம் போட்டால் அது இவன் தலையெழுத்து; இப்போ நீ நமஸ்காரம் பண்ணுவதுதான் முறை. என்னப்பா, உனக்கு ‘ஷாக்'கா? நான் ‘பிஸினெஸ்’ பண்றதே இப்படித்தான். சம்பந்தம் பண்றது ஒரு பெரிய ‘பிஸினெஸ் டீல்'தான். உன் குலம், கோத்ரம் உன்னைக் கேட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டாம். என் பெண்ணை உனக்குக் கொடுக்க இந்த இரண்டு வருஷமா உன்னைப் பற்றி எனக்குத் தெரிஞ்சது போதும். எல்லாமே தெரிந்த வரைக்கும்தானே! மிச்சமெல்லாம் துணிச்சல்தான். வாழ்க்கையின் நியதியே துணிச்சல்தான். என் பெண்ணுக்குத் தாயில்லாக் குறை ஒன்று தவிர வேறு பெருங்குறை யாரும் சொல்லிவிட முடியாது. பணக்காரப் பெண்ணுக்கு, பரிசாரகன் போட்டுக் கொடுத்த காப்பியை வெள்ளி டம்ளரில் ஆற்றிக் கொடுக்கத்தான் தெரியும், வேறொண்ணும் தெரியாது என்று நீ எண்ணாதே. வற்றல்குழம்பு, நாக்கு ஒட்டிக்கச் செவக்க. உணக்கையா சாவித்ரி நன்னா பண்ணுவாள். வற்றல்குழம்பும் சுட்ட அப்பளமும் நம் சீமைக் குலதெய்வம். விருந்து சாப்பாட்டையெல்லாம் அதன் காலில் கட்டியடிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/11&oldid=1125587" இலிருந்து மீள்விக்கப்பட்டது